சென்னை: ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள "பித்தல மாத்தி" திரைப்படம் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இப்படம் காமெடி கலந்த காதல் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் பால சரவணன், தம்பி ராமையா, வித்யூலேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் மாணிக வித்யா இயக்கத்தில் ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் சார்பில் சரவணன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் மாணிக்க வித்யா, தயாரிப்பாளர் சரவணன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் ஆர்வி உதயகுமார், நடிகர் காதல் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய காதல் சுகுமார் , உமாபதி மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.திருமண வரவேற்பு அன்றே அவரது படம் வெளியாவது மிகப் பெரிய ஆசிர்வாதம் என்றும் தெரிவித்தார்.
இயக்குனர் ஆர்வி உதயகுமார் பேசும்போது, நிகழ்ச்சிக்கு வந்தால் எதோ ஒரு விஷயம் அழகாக இருக்க வேண்டும் என்றும் இங்கு ஊடக நண்பர்கள் தான் அழகாக தெரிவதாக கூறினார். உமாபதி, ஐஸ்வர்யா தம்பதிக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து திருமணத்திற்கு பிறகு பெரிய மாற்றம் வரும் என நினைக்கிறேன் என்பதையும் எனக்கும் திருமணத்திற்கு பிறகு தான் முதல் படம் வெளியானது என்றும் கூறினார்.பித்தல மாத்தி படத்தின் ட்ரெய்லர் பாடல்கள் பார்த்ததாகவும் இயக்குனர் மாணிக்க வித்யா ரொம்ப பிரமாதமாக படைத்துள்ளதாகவும் படத்தின் தலைப்பு வித்தியாசமாகவும் அழகாகவும் தமிழ் தலைப்பாகவும் உள்ளது என கூறினார். மேலும் எதார்த்த படங்கள் இன்றைய காலகட்டத்தில் மக்களால் மிகவும் பாராட்டப்படுகிறது என்றும் பித்தலை மாத்தி படமும் நிச்சயம் பாராட்டப்படும் படமாக இருக்கும் என்று கூறினார்.
கே.ராஜன் பேசியதாவது, நான் பலரிடம் பணத்தை கொடுத்துவிட்டு வட்டி வராமல் தவிப்பதாகவும் இப்படி நிறைய பித்தல மாத்திகள் இருக்காங்க கவனமாக இருங்கள் எனவும் கூறி இவர்களுக்கு இடையில் தங்கமான தயாரிப்பாளர் சரவணன் என புகழாரம் சூட்டினார். சினிமாவில் நிறைய பித்தலை மாத்திகள் இருக்கிறார்கள் என்றும் சில இயக்குனர்கள் பித்தலை மாத்திகளாக மாறவில்லை தயாரிப்பாளரையே மாத்திவிடுகின்றனர் என கூறினார். டிக்கெட் விலையை குறைக்க வேண்டும் என்பது குறித்து தான் தமிழக முதல்வரிடம் மனு கொடுத்ததாகவும் முதல்வரும் அதை கவனிப்பதாக சொல்லியிருப்பதாக கூறினார்.
இயக்குனர் மாணிக்க வித்யா பேசும் போது, ஒரு படத்தை ரீ ரிலீஸ் செய்து வெளியிடுவது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்கு தெரியும் என்றும் அந்த அளவுக்கு தயாரிப்பாளர் தன் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக கூறினார். உலகம் முழுவதும் 70 திரையரங்குகளில் படத்தை ரிலீஸ் செய்வதாக கூறினார். இப்படத்தின் தலைப்பு மீது ஆரம்பத்தில் எனக்கு கருத்து வேறுபாடு இருந்ததாகவும் நாம் எல்லோரும் வெளியே ஒரு தோற்றம் உள்ளுக்குள் வேறு தோற்றத்தில் இருப்போம் என்றும் அதுதான் இந்த கதையிலும் உள்ளதாக கூறினார்
தயாரிப்பாளர் சரவணன் பேசும்போது, ஒரு படம் குழந்தை மாதிரி என்று தெரிவித்தார். தாய் இயக்குனர் என்றால் தகப்பன் தயாரிப்பாளர் தான் என்று கூறினார். சத்யராஜ் நடித்த அடாவடி படத்தை டெல்லி வரை சென்று போராடி ரிலீஸ் செய்ததாகவும் ஓடாத படத்தையே ரிலீஸ் செய்தநான் ஓடும் தெரிந்த படத்தை எப்படி விடுவேன் என பேசினார். இந்த படம் எடுக்கும்போது தனக்கு நெஞ்சு வலி வந்ததாகவும் வீட்டில் எல்லோரும் என்னை படம் எடுக்க வேண்டாம் என்று சொல்லியும் இயக்குனருக்காக தான் முடியாத சூழலிலும் வேலை செய்ததாக கூறினார்.
இதையும் படிங்க: 'பயமறியா பிரம்மை' ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் - நடிகர் ஜாக் ராபின்சன் நெகிழ்ச்சி!