சென்னை: பழம்பெரும் கன்னட நடிகரும், இயக்குநருமான துவாரகிஷ்(81) இன்று பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை அவரது மகன் யோகி உறுதி செய்தார். கர்நாடகா குல்லா என அழைக்கப்படும் துவாரகிஷ் 1964ஆம் ஆண்டில் 'வீரசங்கல்பா' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
அதன் பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி 40க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ள துவாரகிஷ், 15க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். கன்னட திரைத்துறையில் பிரபலமான ராஜ்குமார், விஷ்ணுவர்தன் ஆகிய நடிகர்களை இயக்கி புகழ் பெற்றுள்ளார். துவாரகிஷ் நகைச்சுவை நடிகராகப் பல கன்னட சினிமா ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
துவாரகிஷ் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களையும் தயாரித்துள்ளார். பெங்களூரு பல்கலைக்கழகம் துவாரகிஷ் கலை சேவையைப் பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. துவாரகிஷ் குரு சிஷ்யரு, பிரசந்தா குல்லா, கிட்டு பட்டு, ராஜ்குல்லா இன் சிங்கப்பூர், நியாய் எல்லிடே, பெட்டா கெட்டா, ஆப்தமித்ரா, பங்காரடா மனுஷ்யா என பல படங்களில் நடித்துள்ளார்.
துவாரகிஷ் மறைவிற்குப் பிரபல நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது நெருங்கிய நண்பர் துவாரகிஷ் உயிரிழந்தது எனக்கு மிகப்பெரும் வலியைத் தருகிறது. நகைச்சுவை நடிகராகத் தனது திரை வாழ்வைத் தொடங்கி மிகப்பெரும் தயாரிப்பாளர், இயக்குநராக உருவெடுத்தார். அவருடனான நினைவுகள் எனக்குத் தோன்றுகிறது. அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் 'உப்பு புளி காரம்' - Uppu Puli Karam Web Series