சென்னை: 'துரோகி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் சுதா கொங்கரா. அதனைத் தொடர்ந்து 'இறுதிச்சுற்று' மற்றும் 'சூரரைப் போற்று' உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.
அண்மையில் 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கை இயக்கினார். 'சர்ஃபிரா' எனப் பெயரிடப்பட்ட இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்து இருந்தார் இயக்குநர் சுதா கொங்கரா.
என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில்…
— Sudha Kongara (@Sudha_Kongara) July 27, 2024
அதில் "நான் வரலாறு பட்டப்படிப்பை முடித்துள்ளேன். என்னுடைய ஆசிரியர் ஒருமுறை சொன்னார். சாவர்க்கர் மிகப்பெரிய தலைவர். அனைவராலும் மதிக்கப்படுபவர். சாவர்க்கர் திருமணம் செய்து, அவரது மனைவியை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்.
அந்தப் பெண்ணுக்கு வீட்டில் இருப்பதற்குத்தான் விருப்பம். ஏனென்றால், அந்த காலத்தில் பெண்கள் படிக்கமாட்டார்கள். பின்பு அவள் படிக்கப் போகும்போது, அந்தத் தெருவில் உள்ளவர்கள் அவர்களை கிண்டல் செய்வார்கள். அந்த அம்மா அழுதுகொண்டு, பள்ளிக்கு போகமாட்டேன் எனச் சொல்வார்.
அப்போது சாவர்க்கர் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று படிக்க வைக்கச் சென்றார். இது சரியா தப்பா? அங்கிருந்துதான் என்னுடைய கேள்விகள் எழுந்தன" என்றார். இது இணையத்தில் வைரலானது.
மேலும், அது சாவர்க்கர் அல்ல ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரி பாய் பூலே எனவும் பலரும் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில், சாவர்க்கர் குறித்த பேச்சுக்கு இயக்குநர் சுதா கொங்கரா விளக்கம் அளித்துள்ளார்.
அதில், "என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும்.
அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்கு தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையைச் சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரி பாய் பூலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்" என தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: "படங்களே தயாரிக்காத தயாரிப்பாளர்களே..” சங்க நடவடிக்கையால் கடுப்பான விஷால்!