சென்னை: தமிழ் சினிமாவின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான திகழ்வது ஏ.வி.எம். நிறுவனம். 1930களில் இருந்து திரைப்பட தயாரிப்பு, படப்பிடிப்பு ஸ்டூடியோ என திரைப்பட வர்த்தகம் சார்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது ஏ.வி.எம். நிறுவனம்.
இத்தகைய பெருமைமிக்க ஏ.வி.எம். நிறுவனத்தின் நிறுவனரான ஏ.வி.மெய்யப்பனின் கொள்ளு பேத்தி அபர்ணா குகன் ஷியாம், சொத்தில் தனக்கான பங்கை பாகப்பிரிவினை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தனது தந்தை எம்.எஸ். குகன் (ஏ.வி.எம்.சரவணின் மகன்), ஏ.வி.எம். ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளதாகவும், அதன் லாப நஷ்டம் முழுக்க ஏ.வி.எம்
நிறுவனத்துக்கு செல்லும் வகையில் பங்குதாரர் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், ஏ.வி.எம். ஸ்டூடியோஸ் நிறுவனத்தில் தன்னை பங்குதாரராக சேர்க்கவில்லை. அதனால், குடும்ப சொத்துக்களில் தனக்கு சேர வேண்டிய பங்கை பிரித்து வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், பாகப்பிரிவினை நடைபெறும் வரை ஏ.வி.எம். ஸ்டூடியோஸ் திரைப்பட தயாரிப்பு உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி டீக்கா ராமன், ஏ.வி.எம். ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து அபர்ணாவின் தந்தை குகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு, மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி அபர்ணா தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: ’மஞ்சும்மல் பாய்ஸ்’ ஓராண்டு நிறைவு... குணா குகை ரகசியத்தை வெளியிட்ட படக்குழு
’தெய்வப்பிறவி’, ’சர்வர் சுந்தரம்’ என சிவாஜி கணேசன் காலம் தொடங்கி ரஜினியின் ’சிவாஜி’, சூர்யாவின் ’அயன்’ என இதுவரை 175 திரைப்படங்களை தயாரித்துள்ளது ஏ.வி.எம். நிறுவனம். இதில் பல படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட். கடைசிய 2022ஆம் ஆண்டு அருண் விஜய், வாணி போஜன் நடிப்பில் ’தமிழ்ராக்கர்ஸ்’ எனும் வெப் சீரிஸ் ஒன்றையும் தயாரித்திருந்தனர்.
தமிழ் சினிமா என்றவுடன் ஏ.வி.எம் நிறுவனத்தின் வாசலில் உள்ள ஏவிஎம் உலகம் சுற்றுவதுதான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஏ.வி.எம் நிறுவனத்தின் ஸ்டூடியோக்களில்தான் பெரும்பாலான தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பு நடைபேற்று வந்தது. இந்த ஸ்டூடியோக்களை பாதுகாத்து சினிமா அருங்காட்சியகமாக உருவாக்கி மக்களின் பார்வைக்கு அனுமதிக்கவுள்ளதாக ஏ.வி.எம் நிறுவனத்தை சேர்ந்த அருணா குகன் தெரிவித்திருந்தார்.