டெல்லி: 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், உலகெங்கிலும் உள்ள ஸ்டார்ட்அப்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள், 4 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், இந்தியாவில் மட்டும் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக பணிநீக்க கண்காணிப்பு வலைத்தளமான Layoffs.fyi தகவல் வெளியிட்டு உள்ளது.
வீடியோ தொடர்பு தள நிறுவனமான ஜூம் (zoom), மொத்த ஊழியர்களில் 2 சதவீதத்திற்கு குறைவான 50 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதேபோன்று, கிளவுட் (Cloud) மென்பொருள் நிறுவனத்தின் ஊழியர்களில் 7 சதவீதம் அதாவது சுமார் 400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆன்லைன் கட்டண தளமான பேபால் (PayPal) நிறுவனம், அதன் ஊழியர்களில் 9 சதவீதத்தை, சுமார் இரண்டாயிரத்து 500 ஊழியர்களை கடந்த மாதம் பணிநீக்கம் செய்தது. நுகர்வோர் ரோபோக்களை உருவாக்கும் iRobot நிறுவனம், 31 சதவீத ஊழியர்கள் என சுமார் 350 பேரை பணிநீக்கம் செய்து அறிவித்தது. மேலும் அந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி Colin Angle-யும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
எண்டர்பிரைஸ் சாப்ட்வேர் நிறுவனமான சேல்ஸ்ஃபோர்ஸ் ( Salesforce), சுமார் 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. ஆன்லைன் உணவு விநியோக தளமான ஸ்விக்கி (Swiggy) அதன் ஊழியர்களில் ஏறக்குறைய ஏழு சதவீதத்தை, சுமார் 350 முதல் 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
ஈ-காமர்ஸ் தளமான ஈபே (eBay), அதன் ஊழியர்களில் 11 சதவீதத்தை, சுமார் ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது. மேலும், வரும் காலங்களிலும் தொடர்ந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, கூகுளுக்கு (Google) சொந்தமான யூடியூப் (you tube) அதன் கிரியேட்டர் மேனேஜ்மென்ட் மற்றும் ஆபரேஷன் டீம்களில் இருந்து குறைந்தது 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
ஏறக்குறைய, ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிறகு, கூகுள் அதன் விளம்பர விற்பனைக் குழுவில், நூற்றுக்கணக்கான வேலைகளை மறுசீரமைப்புப் பயிற்சியின் ஒரு பகுதியாக குறைப்பதாகக் கூறியது. இதுகுறித்து, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, இந்த ஆண்டு ஊழியர்களின் பணிநீக்கத்திற்கு, தங்களை தயார் படுத்திக் கொள்ளுமாறு ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் கண்ணாடி மீது கல்வீச்சு.. ரயில்வே அதிகாரி விளக்கம் என்ன?