டெல்லி: 2024 மக்களவைத் தேர்தல் திருவிழா மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த நிலையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 20) நடைபெறுகிறது. இதன்படி, பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஆறு மாநிலங்கள், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அது மட்டுமல்லாமல், ஒடிசாவின் 35 சட்டமன்றத் தொகுதிகளின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது. இதற்கான சூறாவளி பிரசாரம் நேற்றைய முன்தினம் மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி மே 3 அன்று முடிவடைந்தது. இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவின் 13 மக்களவைத் தொகுதிகளில் 512 பேர் போட்டியிடுகின்றனர். அதனைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேசத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் 466 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மக்களவைத் தொகுதிகள்: பீகாரில் சீதாமார்ஜி, மதுபானி, முசார்பூர், சரன் மற்றும் ஹஜிபூர் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல், ஜார்கண்டில் சத்ரா, கொடார்னா, ஹஜாரிபாக் ஆகிய தொகுதிகளிலும், ஒடிசாவில் பார்கார்ஹ், சுந்தர்கார்ஹ், பொலாங்கீர், கந்தாமல் மற்றும் அஸ்கா ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மேலும், மகாராஷ்டிராவில் துலே, திந்தோரி, நாசிக், பால்கர், பிவண்டி, கல்யாண், தானே, மும்பை வடக்கு, மும்பை வடக்கு - மேற்கு, மும்பை வடக்கு - கிழக்கு, மும்பை வடக்கு - மத்தி, மும்பை தெற்கு மத்தி மற்றும் மும்பை தெற்கு ஆகிய தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.
அதேநேரம், உத்தரப்பிரதேசத்தின் மோஹன்லால்கன்ஜ், லக்னோ, ரேபரேலி, அமேதி, ஜலாவுன், ஜான்சி, ஹமீர்பூர், பண்டா, ஃபடேபூர், கவுசாம்பி, பராபங்கி, ஃபசியாபாத், கைசெர்கன்ஜ் மற்றும் கோண்டா ஆகிய தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மேலும், மேற்கு வங்கத்தின் பங்கோன், பராக்பூர், ஹெளரா, உலுபெரியா, ஸ்ரீரம்பூர், ஹூக்ளி மற்றும் அரம்பாக் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. அதேபோல், யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை ஜம்மு மற்றும் காஷ்மீரின் பராமுலா மற்றும் லடாக்கின் லடாக் மக்களவைத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
5-ம் கட்ட தேர்தலின் நட்சத்திர போட்டியாளர்கள்: ராஜ்நாத் சிங் (லக்னோ), பியூஷ் கோயல் (மும்பை வடக்கு), ராகுல் காந்தி (ரேபரேலி). சாத்வி நிரஞ்சன் ஜோதி (ஃபடேபூர்), ஷாந்தனு தாகுர் (பனாகன்), சிராக் பஸ்வான் (ஹஜிபூர்), ஸ்ரீகாந்த் ஷிண்டே (கல்யாண்), ராஜிவ் பிரதாப் ருடி மற்றும் லாலு பிரசாத்தின் மகள் ரோஹினி ஆச்சார்யா பீகாரின் சரண் தொகுதியில் களம் காண்கின்றனர். இவ்வாறு நடைபெறுகிற 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இதுவரை 543 மக்களவைத் தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. தொடர்ந்து, 6 மற்றும் ஏழாம் கட்ட வாக்குப்பதிவுகள் மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதனையடுத்து, ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதையும் படிங்க: 'அரசியலில் நுழைபவர்களை வரவேற்போம்..குடும்ப அரசியலுக்கும் முக்கியத்துவம் கிடையாது' - குலாம் நபி ஆசாத் பிரத்யேக பேட்டி! - Ghulam Nabi Azad