டெல்லி : மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, டெல்லி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதனிடையே, முதலமைச்சர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரி இந்து சேனா என்ற அமைப்பின் தேசிய தலைவர் விஷ்ணு குப்தா, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது, துணைநிலை ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு தான் இதில் அதிகாரம் உள்ளது என கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தது இந்நிலையில், தற்போது மற்றொரு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, டெல்லி முதலமைச்ச்ர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என அமைச்சர் அதிஷி தெரிவித்து உள்ளார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றால் தான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தால் டெல்லியில் ஆட்சியை கவிழ்பது பாஜகவுக்கு எளிதாகி விடும், எனவே, அவர் ராஜினாமா செய்ய மாட்டார் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க : உபா, பணமோசடி தடுப்பு சட்டங்கள் ரத்து - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கை வெளியீடு! - CPIM Lok Sabha Poll Manifesto