மும்பை: 18வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 26ஆம் தேதி 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு 2வது கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் மகாராஷ்டிரா, அசாம், குஜராத், உத்தர பிரதேசம், கர்நாடகா, கோவா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 மக்களவை தொகுதிகளுக்கு இன்று (மே.7) 3வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் மேற்கு மகாராஷ்டிரா, கொங்கன், மராத்வாடா பகுதிகளில் உள்ள 11 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
இதற்காக அமைக்கப்பட்டுள்ள 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடையும். பாரமதி, ராய்காட், உஸ்மானாபாத், லத்தூர், சோலாப்பூர், மாதா, சாங்லி, சதாரா, ரத்னகிரி - சிந்துராங், கோலாப்பூர் மற்றும் ஹட்கனங்கலே உள்ளிட்ட11 தொகுதிகளில் களம் கண்டுள்ள தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளின் 258 வேட்பாளர்களின் எதிர்காலத்தை 2.09 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர்.
இவர்களில் 1 கோடியே 7 இலட்சத்து 64 ஆயிரத்து 741 பேர் ஆண் வாக்காளர்கள். 1 கோடியே 2 இலட்சத்து 26 ஆயிரத்து 946 பேர் பெண் வாக்காளர்கள். 929 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். புனே மாவட்டத்தில் உள்ள பாரமதி மக்களவைத் தொகுதியில் களம் காணும் மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மனைவி சுனேத்திர பவாரை எதிர்த்து சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே போட்டியிடுகிறார்.
மராத்வாடா பகுதியில் உஸ்மானாபாத்தில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) மற்றும் சிவசேனா கட்சிகள் நேரடியாக களம் காண்கிறது. அதே வேளையில், 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ள லத்தூர் தனி தொகுதியில் சிவாஜி ராவ் கல்கே (காங்கிரஸ்) மற்றும் சுதாகர் ஷ்ரங்கரே (பாஜக) இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதே தொகுதியில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் நடத்தி வரும் வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி சார்பில் நரசிங்கராவ் உட்கிர்கரும் களத்தில் உள்ளார்.
கோலப்பூரில் காங்கிரஸ் சார்பில் சாஹு சத்ரபதி, சதராவில் பாஜக சார்பில் உதயன்ராஜே போசலே, ரத்னகிரி - சிந்துர்க்கில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: மக்களவை 3ஆம் கட்ட வாக்குப்பதிவு; குஜராத்தில் வாக்களித்த நரேந்திர மோடி, அமித் ஷா! - Lok Sabha Election 3rd Phase