டெல்லி : ஜனவரி 22ஆம் தேதி மதியம் 2.30 மணி வரை விடுமுறை அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொள்வதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்து உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புது அறிவிப்பானையின் படி, ஜனவரி 22ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளும் வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் மத்திய அரசு பணியாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவுக்கு மதியம் 2.30 மணி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஜனவரி 20ஆம் தேதியிடப்பட்ட அறிவிப்பானையை வெளியிட்டு உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம், நோயாளிகளுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்படுவதைத் தடுக்கவும், நோயாளிகளின் பராமரிப்பை எளிதாக்கவும், புறநோயாளிகள் பிரிவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஜனவரி 22ஆம் தேதி வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் அனைத்து அவசர சிகிச்சை சேவைகளும் வழக்கம் போல் இயங்கும் எனக் கூறப்பட்டு உள்ளது. முன்னதாக ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு எய்ம்ஸ் மருத்துவமனை ஜனவரி 22ஆம் தேதி மதியம் 2.30 மணி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
நாளை (ஜன. 22) ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறுகிறது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு உத்தர பிரதேசம் மாநிலமே விழாக் கோலம் பூண்டு உள்ளது. கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமரை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அலை அலையாக மக்கள் அயோத்தி நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி, அனைத்து கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். கோயில் திறப்பை முன்னிட்டு 11 நாட்கள் விரதம் இருந்து நாடு முழுவதும் உள்ள புண்ணிய ஸ்தலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு உள்ளார்.
இதையும் படிங்க : அரிச்சல்முனையில் பிரதமர் மோடி! கோதண்ட ராமர் கோயிலில் சாமி தரிசனம்!