சென்னைபுறநகர்ப் பகுதியான ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் தாமோதரன். இவர், பூந்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று (மார்ச் 25) மாலை தாமோதரன் திருநின்றவூர், அருகே பிரகாஷ் நகரில் வசித்து வரும் தெரிந்த பெண்மணி வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு, திடீரென்று இரு இளைஞர்கள் வந்துள்ளனர்.
அவர்கள் அந்தப் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தாமோதரன் அவர்களைத் தட்டிக் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், இளைஞர்கள் இருவரும் தாமோதரனை மறைத்து வைத்திருந்த கத்தியால் தலையில் வெட்டியுள்ளனர்.
இதில், தாமோதரன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த இரு இளைஞர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன் பின்னர், தாமோதரனை அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் மீட்டு ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.