அகமதாபாத் : கிரிக்கெட்டின் ஹை வோல்டேஜ் என்று அழைக்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டம் வரும் 14ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அகமதாபாத் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இதனால் அகமதாபாத் நகரமே ஜனநெருக்கடி மிகுந்து காணப்படுகிறது. அதேநேரம் அகமதபாத் நகரில் உள்ள தங்கும் விடுதிகளின் கட்டணங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து காணப்படுகின்றன. அதிகபட்சமாக ஒன்றரை லட்ச ரூபாய் வரை தங்கும் விடுதி மற்றும் ஹோட்டல் நிர்வாகங்கள் வசூலிப்பதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை முன்னிட்டு அகமதாபாத் நகரில் பல்வேறு முன்னேற்பாடுகள் களைகட்டி உள்ளன. பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டங்களாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும், இந்தியா - பாகிஸ்தான் லீக் ஆட்டத்தை காண ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். இந்நிலையில் அகமதாபாத் நகரில் உள்ள தங்கும் விடுதிகள், மற்றும் ஹோட்டல்கள் பெரும்பாலும் முழுவதுமாக நிரம்பிவிட்டதாக கூறப்படுகிறது. நட்சத்திர விடுதி முதல் சாதாரண படுக்கை வசதிகள் கொண்ட அனைத்து விடுதிகளும் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.