திருப்பத்தூர்: வாணியம்பாடி, புதூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் 10ஆம் வகுப்பு பயின்று வந்தார். தமிழ்ச்செல்வன் தனது நண்பர்களுடன் வேப்பமரச்சாலை பகுதியில் உள்ள லாலா ஏரி பகுதியில் அமைந்துள்ள விவசாய பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் பொதுக்கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.
நீச்சல் பழகச் சென்ற 10-ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த சோகம்!
Published : Jul 21, 2024, 5:34 PM IST
அப்பொழுது, நீச்சல் பழக கிணற்றில் இறங்கிய தமிழ்ச்செல்வன், எதிர்பாராவிதமாக நீரில் மூழ்கியுள்ளார். உடனடியாக அவரது நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து வாணியம்பாடி தீயணைப்புத் துறையினர் மற்றும் வாணியம்பாடி கிராமிய காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கிய மாணவரை சுமார் 1 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்டனர். அதனைத் தொடர்ந்து, மாணவனின் உடலை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.