Published : Jun 14, 2024, 11:27 AM IST
சாலையில் செல்போன் பேசும்போது கவனம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்ற இளைஞர்! - Mobile Phone Robbery in Kumbakonam
தஞ்சாவூர்: கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில், கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி இரவு பேருந்து நிலைய தென் புறத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் எதிரே ஒருவர் தனியாக அமர்ந்து தனது செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இரண்டு சக்கரத்தில் வந்த மர்ம நபர்களில் ஒருவர், அந்த நபரிடம் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போனை பறித்துக் கொண்டு, அவரது கூட்டாளி தயாராக வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
அப்போது செல்போனை பறிகொடுத்த நபர் அதிர்ச்சி அடைந்தாலும், சட்டென சுதாரித்து ஓடிச்சென்று இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றவரை இழுத்து தனது போனை மீட்க முயன்றுள்ளார். ஆனால், சாலையில் தடுமாறி பரிதாபமாக கீழே விழுந்துள்ளார். தற்போது செல்போனை பறித்துச் செல்லும் காட்சியும், பறிகொடுத்த நபர் சாலையில் தடுமாறி விழும் காட்சியும் அருகே உள்ள சிசிடிவி காட்சி பதிவாகி இருந்துள்ளது.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வரும் நிலையில் கும்பகோணம் மாநகரில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மேலும், இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் மேற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனை பறிகொடுத்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இதுகுறித்து புகார் எதுவும் வராத நிலையில், சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்துக் கொண்டு போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். போலீசாரின் விசாரணைக்குப் பின்னரே குற்றச் செயலில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது தெரியவரும். போலீசார், பேருந்து நிலையம் பகுதிகளில் மட்டுமல்லாது கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் பல பகுதிகளில் இரவு நேரத்தில் ரோந்து சென்றால் மட்டுமே இத்தகைய குற்றச் சம்பவங்களைத் தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.