“அப்பப்பா.. என்னா வெயிலு” தண்ணீரைக் கண்டதும் தன்னை மறந்து குளுகுளு குளியல் போட்ட கஸ்தூரி யானை! - Palani Temple Elephant - PALANI TEMPLE ELEPHANT
Published : Apr 24, 2024, 3:20 PM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு, கடந்த 49 ஆண்டுகளுக்கு முன்பு 8 வயதில் கஸ்தூரி யானை வந்தது. தற்போது 57 வயதாகும் கஸ்தூரி யானை, பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள காரமடை தோட்டத்தில் வளர்க்கப்படுகிறது. பழனியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் மிகவும் நெருக்கமான யானையாகத் திகழும் கஸ்தூரி யானை, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களில் மட்டும் பங்கேற்கிறது.
தற்போது கோடை காலம் துவங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகலில் வாட்டி வதைக்கும் வெயிலைச் சமாளிக்க முடியாமல் மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் சிரமப்படுகின்றன. இதனால் கஸ்தூரி யானைக்காக, காரமடை தோட்டத்தில் 10 லட்சம் ரூபாயில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நீச்சல் குளம் அமைக்கப்பட்டது.
அதனால் கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்க கஸ்தூரி யானை காலையில் சாதாரண குளியல், மாலையில் நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் என தினமும் 2 வேளை குளிக்க வைக்கப்படுகிறது. அதில் யானை கஸ்தூரி நீச்சல் அடித்தும், மூழ்கி குளித்தும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் ஆனந்த குளியல் போடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.