சம்பள பணத்திலிருந்து குழந்தைகளின் படிப்புச் செலவுக்காக ரூ.50 ஆயிரம் வழங்கிய திமுக எம்.பி! - tiruvannamalai MP - TIRUVANNAMALAI MP
Published : Oct 3, 2024, 3:46 PM IST
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே ஆகாரம் கிராமத்தில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில், ஆதாரம் கிராமத்தின் வளர்ச்சி பணிகளுக்காக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் வரவு, செலவு கணக்குகள் அரசு நலத்திட்டங்கள் போன்றவற்றை எம்.பி எடுத்துரைத்தார். மேலும் குழந்தை திருமணம், பெண் சிசு, கரு கலைப்பு, பாலியல் சீண்டல் போன்றவற்றை பொதுமக்கள் குழந்தைகளிடம் எவ்வாறு எடுத்துரைக்க வேண்டும் என்பது பற்றியும் பேசினார்.
இந்நிலையில் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஹேமமாலினி(12) கௌரிசங்கர்(10) ஆகிய குழந்தைகள் தாய் தந்தையை இழந்து படிப்பு செலவிற்காக நாடாளுமன்ற உறுப்பினரிடம் உதவி கேட்டனர். உடனடியாக உதவியாளரை அழைத்து இந்த மாதம் சம்பளம் வந்துவிட்டதா என கேட்டு, சம்பள பணத்திலிருந்து ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை குழந்தைகளுக்கு வழங்கினார்.
அதுமட்டுமின்றி இந்த இரண்டு குழந்தைகளின் படிப்புச் செலவு முழுவதையும் என் உயிர் உள்ளவரை ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினரின் இச்செயல் கிராம மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.