கோவை எம்பிக்குச் சொந்தமான இடத்தில் டாஸ்மாக்.. கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்! - Protest to close TASMAC
Published : Jul 4, 2024, 9:20 PM IST
கோயம்புத்தூர்: கோவை கணபதி - சங்கனூர் இடையேயான சாலையில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமாருக்குச் சொந்தமான கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தில், டாஸ்மாக் (கடை எண்:1638) கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அந்த டாஸ்மாக் கடையை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு கட்டமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மூடாமல் இருப்பதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் கடை முன்பு அமர்ந்து இன்று (வியாழக்கிழமை) திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தனர். மேலும், இப்பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையால் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் என யாரும் அப்பகுதியில் நடமாடவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.