வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்கும் முயற்சி - காடுகளில் உள்ள தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி தீவிரம்! - Tiruvannamalai forest
Published : Feb 14, 2024, 10:37 AM IST
|Updated : Feb 15, 2024, 7:05 AM IST
திருவண்ணாமலை: மழைக்காலம் நிறைவடைந்து வெயில் காலம் துவங்கும் காலங்களில் வனத்தில் வாழும் வனவிலங்குகள் காட்டைவிட்டு வெளியே வருவது வழக்கம். இதனால் விலங்குகளும் பாதிக்கப்பட்டு, மனிதர்களுக்கும் சேதம் ஏற்படுகிறது. ஆகையால் விலங்குகள் வனத்தை விட்டு வெளியே வராமல் தடுப்பதற்காக காட்டில் தொட்டி அமைத்து அதில் நீர் நிரப்பபட்டு வருகிறது.
தற்போது, வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், அண்ணாமலை காப்புக் காடு மற்றும் உள்வட்ட கிரிவலப் பாதையில் உள்ள காடுகளில் வனவிலங்குகளுக்கு தாகம் தீர்க்கும் வகையில் சுமார் 10 ஆயிரம் கொள்ளளவு கொண்ட 10 தொட்டிகள் உள்ளது. இந்த நிலையில், மாவட்ட வனத்துறை அதிகாரி உத்தரவின் பேரில் வனச்சரகர் ஆலோசனைப்படி வனக்காப்பாளர் ராஜேஷ் தலைமையில், வனத்துறையினர் அந்த தொட்டிகளில் நீரை நிரப்பி வருகின்றனர்.
மேலும் இந்த அண்ணாமலையார் காப்புக்காடு மற்றும் உள்வட்ட கிரிவல பாதையில் உள்ள காடுகளில் புள்ளி மான்கள், காட்டுப்பன்றி, மலை பாம்பு, முள்ளம்பன்றி, காட்டு முயல், மயில், உடும்பு, பாம்பு வகைகள் உள்ளிட்ட பல விலங்குகள் உள்ளன.