அரியலூரில் பிரத்தியங்கிரா தேவிக்கு கோலாகலமாக நடைபெற்ற மிளகாய் சண்டி யாகம்! - chilli CHANDI YAGAM IN ARIYALUR
Published : May 8, 2024, 7:12 AM IST
அரியலூர்: அரியலூர் மாவட்டம், பொய்யாத நல்லூர் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அமாவாசையன்று 'சண்டி யாகம்' நடைபெறுவது வழக்கம். சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது.
பக்தர்களின் வேண்டுதலின் பேரில், யாகத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் யாகத்தில் போடப்பட்டன. பின்னர் மா, பலா, வாழை, மாதுளை, திராட்சை உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் மற்றும் பல்வேறு வகையான மூலிகைகள், சேலைகள் யாகத்தில் இடப்பட்டன. பின்னர் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டங்களிலிருந்த புனித நீரானது பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.
இந்த யாகத்தில் கடலூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், சென்னை, கன்னியாகுமரி, மதுரை, கோயம்புத்தூர் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தீபாராதனைக்குப் பின்பு, அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடப்பட்டது. இதில், கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த சண்டி யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.