சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலம்! - SANKARANKOVIL Therottam - SANKARANKOVIL THEROTTAM
Published : Apr 21, 2024, 4:47 PM IST
தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா பத்து நாள்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவிழா நாட்களில் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா வரும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிலையில், திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
தேரோட்டத்தை முன்னிட்டு, இன்று (ஏப்.21) அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள் தனித்தனியாக அலங்கரிக்கப்பட்டு திருத்தேர்களில் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து, காலை 10.25 மணிக்கு சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோடை காலம் என்பதால் பக்தர்களின் தாகத்தைத் தணிக்க பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே நீர், மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது. சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத்துறை வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தேரோட்டத்தை ஒட்டி, 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.