டயர் வெடித்து விபத்து: வாகனம் கவிழ்ந்து சாலையில் கொட்டிய மீன்கள்...அள்ளிச் சென்ற பொதுமக்கள்... - FISH LOAD VAN ACCIDENT
Published : Feb 6, 2025, 1:14 PM IST
வேலூர்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (28). இவர் மினி லோடு வேனின் வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா அடுத்த அகரம் சேரி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக விஜயவாடாவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு கடல் மீன்களை ஏற்றி வந்து கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக லோடு ஏற்றி வந்த மினி வேனின் டயர் வெடித்ததில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததில், வேன் சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷடவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இருப்பினும் விபத்தின் போது வாகனம் சாய்ந்ததில், அதில் இருந்த கடல் மீன்கள் வாகனத்தில் இருந்து வெளியே பறந்து, சாலையில் சிதறின. இதையடுத்து சாலையில் சிதறிக் கிடைக்கும் 2 டன் கடல் மீன்களையும் அப்பகுதி மக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பைகளிலும், பாத்திரங்களிலும் அள்ளிச் சென்றனர். தகவல் அறிந்து வந்த பள்ளிகொண்டா போலீசார் மீன் அள்ளிக் கொண்டிருந்த பொது மக்களை விரட்டினர். இதனால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.