டெல்லி :இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் கனவுத் திட்டங்களில் ஒன்றான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் சீரான வேகத்தில் செயலாக்கம் கண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் வீரர்களை பிரதமர் மோடி இன்று (பிப்.27) அறிமுகப்படுத்தினார்.
இந்திய விமானப் படையை சேர்ந்த குருப் கேப்டன் பிரஷாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குருப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குருப் கேப்டன் அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் சோதனை விமானிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் சோதனை விமானிகள் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், வியோமாநாட்ஸ் என்றால் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தேர்வு செய்யப்பட்ட நான்கு வீரர்கள் தான் இந்தியாவின் சார்பில் முதல் முறையாக விண்வெளிக்கு செல்ல உள்ளனரா என்றால் அது தான் கிடையாது. இவர்கள் நான்கு பேருக்கு முன்னதாகவே இந்திய வீரர் ஒருவர் விண்வெளிக்கு சென்று திரும்பி உள்ளார் என்பது தான் உண்மை. விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா கடந்த 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் இன்டர்காஸ்மோஸ் திட்டத்தில் Soyuz T-11 என்ற விணகலத்தின் மூலம் விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை பெற்றார்.
அவர் இதுவரை விண்வெளிக்கு சென்று திரும்பிய ஒரே வீரர் என்ற சிறப்பை பெற்று உள்ளார். அதனால் பிரஷாந்த் பாலகிருஷ்ணன் நாயர், கிருஷ்ணன், பிரதாப் மற்றும் சுக்லா ஆகியோர் விண்வெளிக்கு சென்ற இந்தியாவின் முதல் ஆஸ்ட்ரோநாட்ஸ் என தங்களை கூறிக் கொள்ள முடியாது. மாறாக விண்வெளி சென்ற முதல் வியோமாநாட்ஸ் என தங்களை பிரபரலப்படுத்திக் கொள்ளலாம்.
வியோமாநாட்ஸ்(Vyomanauts) என்றால் என்ன? :
விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ள ஒவ்வொரு நாடும், தங்களது பாரம்பரியம், கலாசாரம், மொழி உள்ளிட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் தங்கள் நாட்டு விண்வெளி வீரர்களுக்கு பெயரிடுகிறது. அதன்படி, உலகின் 4வது நாடாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு உள்ள இந்தியா, தனது வீரர்களுக்கு வியோமாநாட்ஸ் என பெயரிட்டு உள்ளது.
சோவியத் யூனியன் (தற்போதைய ரஷ்யா), சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக 4வது நாடாக இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. விண்வெளிக்கு வீரர்களை அமெரிக்கா ஆஸ்ட்ராநாட்ஸ் (astronauts) என்றும் ரஷ்யா தங்களது வீரர்களை காஸ்மோநாட்ஸ் (cosmonauts) என்றும் அதேநேரம் சீனா டைகோநாட்ஸ் (taikonauts) என்றும் தங்களது விண்வெளி வீரர்களை அழைத்து வருகிறது.
அமெரிக்கா மற்றும் அப்போதைய சோவியத் யூனியனுக்கு இடையிலான பனிப் போர் தொடங்கிய காலத்தில் இருந்து விண்வெளிக்கு செல்லும் வீரர்களை மொழி, கலாசாராம், பாரம்பரியம் உள்ளிட்ட வகைகளின் மூலம் தனித்து அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்ததாக கூறப்படுகிறது. 1950 முதல் 1960 இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவின் நாசா தொடங்கப்பட்ட நிலையில் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் போது ஆஸ்ட்ரோநாட்ஸ் என பெயர் புழகத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
அதாவது கிரேக்க மொழியில் ஆஸ்ட்ரான் (astron) என்பது நட்சத்திரத்தையும், நாட்ஸ் (nautes) என்பது மாலுமி என்ற அர்த்தத்தையும் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதையே நாசா தனது விண்வெளி வீரர்களுக்கு ஆஸ்ட்ரோநாட்ஸ் என பெயரிட்டு அழைத்து உள்ளது. காலப் போக்கில் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்ட ரஷ்யா, சீனா உள்ளிட்ட ஏனைய நாடுகளும் தங்களது விண்வெளி வீரர்களை மொழி மற்றும் கலாசார அடிப்படையில் தேர்வு செய்து அழைத்து உள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீனா முதல்முறையாக Yang Liwei என்பவரை விண்வெளிக்கு அனுப்பியது. அவருக்கு டைகோநாட் என பெயரிடப்பட்டது. பழங்கால மாண்டரீன் சீன மொழியில் டைகோங் என்பது விண்வெளியையும், நாட் என்பது கிரேக்கத்தில் மாலுமியையும் குறிக்கும்.
இருப்பினும், விண்வெளி வீரர்களுக்கான அதிகாரப்பூர்வ சீனப் பெயராக யுஹாங்யுவான், (yuhangyuan) அதாவது பிரபஞ்சத்தின் பயணிகள் என அழைக்கப்படுகிறது. அந்த வழியில் இந்தியா தனது விண்வெளி வீரர்களுக்கு வியோமாநாட்ஸ் என பெயரிட்டு உள்ளது. சமஸ்கிருத மொழியில் வியோமா என்பது விண்வெளியை குறிக்கிறது.
சமஸ்கிருத மொழியின் அடிப்படையில் வியோமாநாட்ஸ் என விண்வெளி வீரர்களுக்கு இஸ்ரோ பெயரிட்டு அவர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
இதையும் படிங்க :ககன்யான் மூலம் விண்ணில் பறக்கப் போகும் இந்தியர்கள் இவர்கள்தான்!