தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tech Team

Published : Sep 26, 2024, 8:10 PM IST

ETV Bharat / technology

71 நாள் புதைந்திருந்த அர்ஜூனின் உடல்; கண்டுபிடிக்க உதவிய புதிய ட்ரோன் தொழில்நுட்பம்! - How Arjun Body was found

ஷிரூர் நிலச்சரிவில் காணாமல் போன அர்ஜூனின் உடலை 72 நாள்கள் கழித்து, தொழில்நுட்ப உதவியுடன் ஓய்வுபெற்ற இந்திய ராணுவ மேஜர் ஜெனரல் இந்திரபாலன் தலைமையிலானக் குழுக் கண்டுபிடித்து ஆறுதல் அளித்துள்ளது. இச்சமயத்தில், அர்ஜூனைக் கண்டுபிடிப்பதில் ஐ-போட் (i-BOD) தொழில்நுட்பம் எப்படி உதவியது என்பதை நம்முடன் பகிர்ந்துள்ளார். அதன் வீடியோ இந்த செய்தித் தொகுப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

shirur landslide missing arjun body and lorry found after 72 days using ibot tech says major general indira balan news thumbnail
அர்ஜூனின் உடலைக் கண்டுபிடித்தது தொடர்பாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் இந்திரபாலன் நமக்கு பிரத்யேகப் பேட்டியளித்தார். (ETV Bharat)

சென்னை: மோசமான வானிலை, கடுமையான மழை, பாய்ந்தோடும் வெள்ளம் என கர்நாடக மாநிலம், கங்காவலி கரையோரம் இருக்கும் சாலையில், அக்கேஷியா மரங்களை (Acacia Wood) ஏற்றிக்கொண்டு கேரளா திரும்பிக்கொண்டிருந்த 30 வயது நிரம்பிய அர்ஜூனுக்கு (Arjun) தெரியாது; தன்னை தகர்க்க ஒரு பேரிடர் காத்திருக்கிறது என்று தெரியவில்லை! கடுமையான நிலச்சரிவில் சிக்கிய அர்ஜூனுடன் சேர்த்து பல பேர் காணாமல் போனர்.

ஜூலை 14 நடந்த இச்சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணி, பெரிய அளவில் கைக்கொடுக்காத நிலையில், பல கட்டங்களைத் தாண்டி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் இந்திரபாலன் (Retired Major General Indira Balan) தலைமையிலாகக் குழு களத்தில் இறங்கியது.

இதில் தனக்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்துள்ள இந்திரபாலன், உயிரைப் பணையம் வைத்து மேற்கொள்ளப்பட்ட பணி இது எனவும், முதலில் பெர்முடா முக்கோண மர்மம் (Bermuda Triangle) போல இது இருந்ததாகவும் கூறினார். மேலும், தங்களிடம் இருந்த மேம்பட்ட தொழில்நுட்பத்தால் மட்டுமே இது சாத்தியமானதாகவும் தெரிவித்தார்.

ட்ரோன் பயன்படுத்திய தேடுதல் பணியில் ஓய்வுபெற்ற இந்திய ராணுவ மேஜர் ஜெனரல் இந்திரபாலன் குழு. (ETV Bharat)

மோசமான வானிலை:

சுமார் 400 மரத்துண்டுகளை ஏற்றிக்கொண்டு வந்த பாரத் பென்ஸ் டிரக் (Truck) நிலச்சரிவில் சிக்கி மாயமானது. மோசமான வானிலை மாயமானோர் உடலை தேட விடாமல் தடுத்தது. ஆனால், மேஜர் ஜெனரல் இந்திரபாலன் தலைமையிலானக் குழு புதிய தொழில்நுட்பத்தை அங்கு பயன்படுத்தியது. பொதுவாக இந்தியாவில் நீருக்கு அடியில் மண்ணில் புதைந்தப் பொருளைத் தேடும் பெரிய தொழில்நுட்பங்கள் கிடையாது. ஆனால், ஒரு தொழில்நுட்பம் இருக்கிறது. அதையும், இந்த நிகழ்வுக்கு செயல்படுத்த முடியாது.

  • ஜிபிஆர் தொழில்நுட்பம்: இந்த தொழில்நுட்பம், கட்டட பொறியாளர்களால் ஒரு மீட்டர் ஆழமுள்ள இடங்களை, குழாய்களை ஆராய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த தேடுதல் வேட்டையில் இது சாத்தியமில்லை என்று கூறுகிறார் இந்திர பாலன்.

இந்த சூழலில், இவர்கள் ரேடியோ அலைவரிசை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இதை ஐ-போட் (i-BOD) என்றும் அழைக்கிறார்கள். முக்கியாமாக இதை ட்ரோன் வாயிலாக சோதனைக்கு உட்படுத்துகிறார்கள்.

ட்ரோன் தொழில்நுட்பம் (ETV Bharat / Meta)

ஐ-போட் தொழில்நுட்பத்தின் அங்கங்கள்:

  1. ட்ரோன்
  2. டிரான்ஸ்மிட்டர் (Transmitter)
  3. ரிசீவர் (Receiver)
  4. இயந்திர கற்றல் (மெஷின் லெர்னிங்)
  5. செயற்கை நுண்ணறிவு (AI)
  6. தரவு செயலாக்கம் (டேட்டா மைனிங்)
  7. தரவு பகுப்பாய்வு (டேட்டா அனலெட்டிக்ஸ்)

இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து தான், 72 நாள்களுக்குப் பிறகு அர்ஜூனின் உடலைக் கண்டுபிடிக்க உதவியுள்ளது. இது எப்படி வேலை செய்தது என்பதை மேஜர் ஜெனரல் விவரித்துள்ளார்.

இதையும் படிங்க:

  1. சந்திரயான் திட்டம்: நிலவில் 160 அடி அகலம் உள்ள பள்ளம் கண்டுபிடிப்பு! - PRAGYAN ROVER FOUND WIDE CRATER
  2. ஜிபிஎஸ் முதல் AI வரை: கால்பந்து அனுபவத்தை வேற லெவலாக்கும் புதுமையான டெக்னாலஜிகள்! - TECHNOLOGY USED IN FOOTBALL
  3. இப்படி ஒரு படகை வாங்கணும்: அசரடிக்கும் திறனுடன் கேண்டேலா சி-8 மின்சாரப் படகு உலக சாதனை! - Candela C 8 electric speedboat

அர்ஜூனின் உடலைத் தேடிய ஐ-போட்:

  • ட்ரோனில் டிரான்ஸ்மிட்டர் இணைக்கப்பட்டு, முதலில் கங்காவலி ஆற்றின் கரையில் தேடப்பட்டது.
  • பின்னர், ஆற்றின் மேற்பரப்பில் டிரான்ஸ்மிட்டர் மற்றும் உபகரணங்களுடன் பறந்த ட்ரோன், ரேடியோ அலைகளை கீழ் நோக்கிச் செலுத்தியது.
  • அப்போது, கிடைக்கும் தகவல்கள், ரிசீவருக்கு அனுப்பப்பட்டது.
  • அனுப்பப்படும் ரேடியோ அலையின் தகவல்கள் அனைத்தும், டேட்டா மைனிங், டேட்டா அனலெட்டிக்ஸ் வல்லுநர்கள் குழுவால், அதற்கு தேவையான பயன்பாடுகளைக் கொண்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது.
  • முக்கியமாக, அனுப்பபடும் தகவல்கள், இது இயற்கையானப் பொருள்; இது வேற்றுப் பொருள் (Foreign object) என்பதைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டது.
  • பல கட்ட ஆய்வுகள் இப்படி நடத்தப்பட்டு, முடிவில் ஒரு வேற்றுப் பொருள் கண்டறியப்பட்டு, மீட்புக் குழுவிற்கு வழிகாட்டப்பட்டது.

மேலும் இதுதொடர்பாக பேசிய மேஜர் ஜெனரல், "எங்களுக்குக் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நான்கு இடங்களை குறியிட்டுக் கொடுத்தோம். அதில், முதல் இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், நான்காவது இடம் சாத்தியக்கூறுகள் குறைவாக இருக்கும் இடமாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்காக, கோவாவில் இருந்து கொண்டு வரப்பட்ட டிரெட்ஜர் வாகனம் (Dredger vehicle) கொண்டு தேடுதல் பணித் தொடங்கியது. பின், குறியிட்ட இடங்களில் இருந்து அர்ஜூனின் உடல் மற்றும் டிரக் கிடைத்தது. 72 நாள் தேடுதல் வேட்டைக்குக் கிடைத்த வெற்றி என்றாலும், அர்ஜூனின் இழப்பு நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது." என்று அவர் தெரிவித்தார்.

அர்ஜூனின் உடலைத் தேடப் பயன்படுத்திய தொழில்நுட்பம் குறித்து விளக்கிய ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் இந்திரபாலன். (ETV Bharat)

அர்ஜூனுக்கு நடந்தது என்ன?

ஜூலை 14, 2024 அன்று உத்தர கர்நாடகாவின் அங்கோலா அடுத்த ஷிரூரில், கோழிக்கோடு கண்ணாடிக்கல்லைச் சேர்ந்த அர்ஜூன் எனும் இளைஞர், பெலகாவியில் இருந்து அக்கேஷியா மரத்தடிகளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டு அவர் மாயமானார். பலக் குழுக்களும் தேடுதல் பணியைத் தொடங்கியது.

ஜூலை 19 அன்று கடற்படையும், 20 ரேடார்களுடன் தொழில்நுட்ப நிபுணர்களும் களத்தில் இறங்கினர். ஜூலை 20 தொடங்கிய ரேடார் தேடுதலில், அர்ஜுன் உள்பட காணாமல் போன 3 பேரைக் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

ஜூலை 22, அருகிலுள்ள கங்காவலி ஆற்றில் தேடுதல் பணித் தொடங்கியது. டீப் செர்ச் டிடெக்டர் (Deep Search Detector) கொண்டு நடத்தப்பட்ட தேடலில், ஆற்றில் கரையில் டிரக்கோ, புதைந்த நபர்களோ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேம்பட்ட தொழில்நுட்பங்களைத் தழுவிய ஐபோட், சோனார் கருவிகள் களத்தில் கொண்டுவரப்பட்டன. இது மேஜர் ஜெனரல் இந்திரபாலன் தலைமையில் நடைபெற்றது. சில இடங்களில் டிரக்கின் பாகங்கள் கண்டுபிடிக்கப்படாலும், டிரக் எங்குள்ளது என்பதை அறிவதில் சிக்கல் நீடித்தது.

தொடர்ந்து நடந்தப்பட்ட தேடுதலில், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 132 மீட்டர் தூரத்தில் டிரக் புதைந்திருப்பதாக ஐ-போட் ட்ரோன்கள் கண்டுபிடித்தன. இதனையடுத்து, ஆற்றில் மூழ்கி தேடும் பணி நடத்தப்பட்டது. ஆனால், எட்டு முறை முயற்சித்தும் பெரிதாக ஒன்றும் தென்படவில்லை. அதிபயங்கர மழையும், ஆற்றில் வேகமாக பாய்ந்தோடும் வெள்ளமும் மீட்புப்பணிக்குத் தடையாக இருந்தது.

ஜூலை 28 முதல், மோசமான வானிலை காரணமாக தேடுதல் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

கோவாவில் இருந்து கொண்டுவரப்பட்ட டிரெட்ஜர் (ETV Bharat)

தொடர்ந்து, ஆகஸ்ட் 14 முதல் மீண்டும் தேடுதல் பணித் தொடங்கியது. அப்போதும் தொழில்நுட்ப கருவி ஐ-போட் காட்டிய வழியில் தேடுதல் நடத்தப்பட்டு, டிரக்கின் சில பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து, கோவாவில் இருந்து டிரெட்ஜர் வாகனம் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி முடிக்கிவிடப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்ட அர்ஜூனின் டிரக் புகைப்படம். (ETV Bharat)

முடிவில், கங்காவலி ஆற்றின் கரையில் இருந்து 65 மீட்டர் தூரத்தில், 12 மீட்டர் ஆழத்தில் அர்ஜூனின் உடலும், டிரக்கும் கண்டெடுக்கப்பட்டது. அதாவது, பல போராட்டங்களை அடுத்து இந்த சம்பவம் நடந்து 72 நாள்கள் கழித்து, அர்ஜூனின் உடல் நேற்று (25/09/2024) பகல் கிடைத்தது. பல நாள்கள் கழித்து உடல் கிடைத்ததில் சற்று ஆறுதல் கிடைத்தாலும், இச்சம்பவம் அங்கிருந்தோரை சோகத்தில் ஆழ்த்தியது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய (ETV Bharat)

இங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details