சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு, கௌரி கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ள போட் (Boat) படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கௌரி கிஷன், சிம்புதேவன், எம்.எஸ். பாஸ்கர், இசை அமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
7 மணி அளவில் படக்குழுவினர் அனைவரும் வந்துவிட்ட நிலையில், நடிகர் யோகி பாபு வேறு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் நிகழ்ச்சி முடிவதற்குள் வந்துவிடுவார் என்று கூறப்பட்டது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் படத்தில் நடித்தது குறித்து பத்திரிகையாளர்களிடம் தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். அதன்பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சியில் இயக்குநர் சிம்பு தேவன் உள்ளிட்டோரும் தங்களது பதில்களை தெரிவித்து வந்தனர். அதன் பின் 9 மணிக்கு நிகழ்ச்சி முடிந்தபிறகு யோகிபாபு வந்தார்.
அத்தனை நேரம் காத்துக்கொண்டு இருந்த பத்திரிகையாளர்கள் உடனே அவரிடம் தாமதமாக வந்தது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய யோகி பாபு, "அனைவருக்கும் வணக்கம். சில தினங்களுக்கு முன் குற்றாலத்தில் இருந்து பத்து மணி நேரம் காரில் பயணம் செய்து இப்படத்தின் புரொமோஷனில் பங்கேற்றேன். எல்லா கம்பெனியும் எல்லா நேரமும் அட்ஜெஸ்ட் பண்ணமாட்டார்கள். எனது சூழ்நிலை அப்படி மாட்டிக் கொண்டேன். யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம். எப்போதும் உங்கள் ஒத்துழைப்பு எனக்கு வேண்டும்" என்று பேசினார்.