தமிழ்நாடு

tamil nadu

பெண் காவலரிடம் மொபைல் நம்பர் கேட்டாரா சவுக்கு சங்கர்.. நீதிமன்றத்தில் காரசார வாதம்! - Savukku Shankar asked Mob No

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 9:08 PM IST

Updated : May 15, 2024, 9:37 PM IST

Savukku Shankar: பெண் காவலர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில், சவுக்கு சங்கர் மீண்டும் நாளை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சவுக்கு சங்கர் மற்றும் அவரது வழக்கறிஞர் புகைப்படம்
சவுக்கு சங்கர் மற்றும் அவரது வழக்கறிஞர் புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

சவுக்கு சங்கர் நீதிமன்றத்திற்கு அழைத்து வருதல் மற்றும் சவுக்கு சங்கர் வழக்கறிஞர் பேட்டி (video credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி: சவுக்கு சங்கர் காவல்துறையில் பணியாற்றும் பெண்களைப் பற்றி அவதூறாக சமூக வலைத்தளத்தில் நேர்காணல் கொடுத்ததாக, கோவையில் வழக்கு தொடரப்பட்டு தேனியில் கைது செய்யப்பட்டார். மேலும், திருச்சி முசிறி டிஎஸ்பி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடிப்படையில், கோவை சிறையிலிருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு ஆஜராக போலீசார் அழைத்து வந்தனர். இந்த நிலையில், “இந்த ஒரு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் வழக்கு தொடர்வது தேவையில்லாத ஒன்று. அதேபோன்று, ஒரு வழக்குக்கு பல்வேறு இடங்களில் நீதிமன்றத்தில் ஆஜராகி காவல்துறை விசாரணைக்கு எடுக்கின்றனர்.

ஏற்கனவே நீதிமன்றக்காவலில் இருக்கும் போது அவருடைய கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மீண்டும், மீண்டும் காவல்துறை விசாரணைக்கு எடுக்கும் போது அவர் கை எலும்பு முறிவு ஏற்பட்டது போல், நாளை அவர் கால் எலும்பும் முறியும் சூழல் ஏற்படும். ஒரு விவகாரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் வழக்கு போடுவதைத் தவிர்க்க வேண்டும்” என சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

இதனையடுத்து, அரசுத் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, காவல்துறை சார்பில் விசாரணைக்கு எடுத்தால் மட்டுமே அவரிடம் என்ன முகாந்திரம் உள்ளது என்பது குறித்தான விவரங்கள் வெளியே கொண்டு வர முடியும் என வாதிட்டனர்.

பின்னர், சவுக்கு சங்கர் தரப்பில், பெண் காவலர்கள் நேம், பேட்ச் இல்லாமல் அழைத்து வந்ததும், வேனில் அவரை அடித்ததாகச் சொல்லப்பட்ட புகாரில் அழைத்து வந்த காவலர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வழக்கறிஞர் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது திடீரென உள்ளே வந்த பெண் காவலர்கள், “இப்ப கூட வேனில் வரும்போது உங்கள் அனைவரையும் மீடியாவில் கிழிக்கிறேன்” என சவுக்கு சங்கர் மிரட்டியதாகக் குற்றம் சாட்டினார். மற்றொரு பெண் காவலர், “தன் கல்யாணம் ஆகாத நபராக பணியில் இருக்கிறேன். நான் அவருடன் வேனில் பயணிக்கும்போது எனது பெயர் மற்றும் எனது போன் நம்பர் கேட்கிறார். நான் வழங்கி இருந்தால் எனது பெயருக்கும் அவப்பெயர் ஏற்படுத்துவார்” எனக் குற்றம் சாட்டினர். இதனால் நீதிபதி முன்பு பரபரப்பான விவாதம் இரு தரப்பினரிடையே ஏற்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள கிளைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டு நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இந்நிலையில், சவுக்கு சங்கர் நீதிமன்றத்தை விட்டு காவல்துறையினர் அழைத்து வந்தபோது, நீதிமன்ற வாசலில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் துடைப்பம் மற்றும் செருப்புடன் சவுக்கு சங்கரை எதிர்த்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கரின் வழக்கறிஞர், "சைபர் கிரைம் போலீசார் மதியம் ஒரு மணிக்கு சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சவுக்கு சங்கரைத் தாக்கிய காவலர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு நாள்கள் கஸ்டடி எடுக்க காவல்துறை தரப்பில் மனு வழங்கப்பட்டுள்ளது. ஒரு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் வழக்கு தொடர்வது தேவையில்லாத ஒன்று என நீதிபதியிடம் கூறி உள்ளோம். மேலும், கஸ்டடிக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என நீதிபதியிடம் வலியுறுத்தி உள்ளோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க:“போதைப்பொருள் நுழைவைத் தடுக்க போலீசாருக்கு போதிய பயிற்சிகள் வழங்க வேண்டும்” - உயர் நீதிமன்றக்கிளை கருத்து! - Special Unit Form Trafficking Ganja

Last Updated : May 15, 2024, 9:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details