விழுப்புரம்: நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக மலையரசன் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சிட்டிங் எம்.பியாக உள்ள பொன்முடியின் மகன், கௌதம் சிகாமணிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
முன்னதாக ஒருங்கிணைந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பொன்முடியே மாவட்டம் முழுவதும் அதிக பெரும்பான்மையுடன் வலம் வந்தார். விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட பின்னர், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சராக எ.வ.வேலு நியமிக்கப்பட்டார்.
அப்போது முதல், பொன்முடியின் ஆதரவாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாவட்டத்தில் ஓரங்கட்டப்பட்டு வந்ததாக ஒரு குற்றச்சாட்டும் கட்சியினர் மத்தியில் எழுந்தது. அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் என்றாலே, பொன்முடி மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்களின் பேனர்களும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நிரம்பி வழிந்து காணப்படும்.
இந்நிலையில், தற்போது பொன்முடியின் மகனே ஓரங்கட்டப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே நேரத்தில் சமூக ஆர்வலர்கள், தற்போது கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கான திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மலையரசனும், எ.வ.வேலுவின் சிபாரிசு என்கிறார்கள்.
மேலும், அரசியல் ஆர்வலர்கள் மத்தியில், உச்ச நீதிமன்றத்தில் பொன்முடிக்கு எதிரான ஊழல் வழக்கில் அவருக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டால், அவரால் அடுத்து வரும் இரண்டு தேர்தல்களில் போட்டியிட முடியாத சூழல் ஏற்படலாம்.