தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2024, 7:00 PM IST

ETV Bharat / state

மக்கள் நீதி மய்யம் நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்தில் 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்! - Makkal Needhi Maiam meeting

Makkal Needhi Maiam: சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கமல்ஹாசன் தலைமையில் கூட்டம்
கமல்ஹாசன் தலைமையில் கூட்டம் (Credits - KAMALHASSAN X Page)

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம், துணைத் தலைவர்கள் A.G.மௌரியா IPS, R.தங்கவேலு மற்றும் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு கட்சியின் மாநில நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் முன்மொழியப்பட்ட 12 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அவைகளாவன;

  • வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல். வயநாடு நிலச்சரிவில் பல உயிர்களை காப்பாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த செவிலியர் சபீனாவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு மனதார பாராட்டுகிறது. நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் புதிய கட்டுமானங்கள் உருவாக்கப்படுவதைத் தவிர்க்கும் விதமாக விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வை அனைத்து தரப்பினரிடமும் ஏற்படுத்தி பேரிடர் சேதங்களைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற முன்மொழியப்படுகிறது.
  • கட்சி நிர்வாகப் பணிகளையும், செயல்பாடுகளையும் மேலும் செம்மைப்படுத்தும் வகையில், கட்சியின் விதிமுறைகளில் BYE-LAW-வில் தேவையாகக் கருதும் மாற்றங்களை மேற்கொள்ள கட்சியின் நிர்வாகக் குழுவிற்கு முழுப்பொறுப்பு வழங்கப்படுவது என தீர்மானிக்கப்படுகிறது.
  • 2026 சட்டமன்றத் தேர்தலை சிறப்புற எதிர்கொள்ளும் பொருட்டு, மாநிலச் செயலாளர்களாகப் பணியாற்றும் அனைவரும் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு உறுப்பினர்களாகச் செயலாற்றுவார்கள் என்று தீர்மானிக்கப்படுகிறது. மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழுவில் தலைவர், தலைவரால் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் நிர்வாகிகளாக இருப்பார்கள் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
  • 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதிக்குள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று நிர்வாகக் குழுவுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. இதன் தொடர்பாக, நிர்வாகக்குழு எடுக்கும் அனைத்து முடிவுகளையும் செயற்குழு அங்கீகரிக்கிறது.
  • நம்மவர் நூலகம் பல ஊர்களில் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்காக கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கும், கமல் பண்பாட்டு மையத்துக்கும், நூலகம் அமைக்க உதவிக் கொண்டிருக்கும் வடஅமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்க தோழர்களுக்கும், அதன் ஒருங்கிணைப்பாளராக சிறப்பாகச் செயல்பட்டு வரும் சி.ஆர்.மதுசூதனுக்கும், கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
  • மகத்தான மக்கள் தலைவராகவும், தமிழுணர்வு மிக்கவராகவும் திகழ்ந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நாணயம் வெளியிட காரணமாக இருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிக்கும், அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த மத்திய அரசுக்கும் செயற்குழு பாராட்டு தெரிவிக்கிறது.
  • எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைத்த வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்த உடனடியாக சட்ட உத்தரவாதங்களை அளிக்குமாறு மத்திய அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
  • மனசாட்சியுடன் தொடர்ந்து வரி செலுத்தும் மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு மத்திய பட்ஜெட்டில் உரிய சலுகைகள் அளிக்கப்பட வேண்டுமென மத்திய அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
  • தமிழகத்தில் விரைவில் வடகிழக்குப் பருவமழை தொடங்க இருப்பதால், பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அனைத்து விதமான வானிலை எச்சரிக்கைகளையும் தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
  • 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை சிறப்புற எதிர்கொண்டு மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கு ஏதுவாக தேர்தல் குழுவை அமைக்கவும், இது தொடர்பாக பிற முடிவுகளை எடுக்கவும் நிர்வாகக்குழுவிற்கு முழு அதிகாரம் அளிக்கப்படுகிறது. அவ்வாறு நிர்வாகக்குழு எடுக்கும் அனைத்து முடிவுகளையும் செயற்குழு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.
  • இப்ராஹிம் அக்பரரை கட்சியின் நிர்வாகக்குழுவின் உறுப்பினராக இந்த செயற்குழு ஏகமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றுகிறது.
  • குற்றங்களில் ஈடுபடுபவர் மீது துரிதமான நடவடிக்கைகளை எடுக்கவும், அதிகபட்ச தண்டனைகளை விரைந்து வழங்கவும் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க மத்திய, மாநில அரசுகளை மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு வலியுறுத்துகிறது.
    ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ABOUT THE AUTHOR

...view details