தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மாதங்களுக்குப் பிறகு மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் திறப்பு! - melpathi draupadi amman temple - MELPATHI DRAUPADI AMMAN TEMPLE

Melpathi Draupadi Amman temple: மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் 9 மாதங்களுக்குப் பிறகு இன்று அகற்றப்பட்ட நிலையில், கோயிலில் ஒரு கால பூஜை நடைபெற்றது.

melpathi draupadi amman temple
melpathi draupadi amman temple

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 22, 2024, 3:23 PM IST

melpathi draupadi amman temple

விழுப்புரம்:கோலியனூர் அருகே உள்ள மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி திரெளபதி அம்மன் கோயிலை வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

பூட்டி சீல் வைக்கப்பட்ட திரெளபதி அம்மன் கோயிலை திறக்கக் கோரி, ஒரு தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் கோயிலை திறந்து பொதுமக்களை அனுமதிக்காமல் ஒரு கால பூஜையை மட்டும் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, இன்றைய தினம் கோயில் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் கதவு அடைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வரும் 22ஆம் தேதி திரெளபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி கோயிலை திறந்து ஒரு கால பூஜையை மட்டும் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது.

மேலும், இது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், செய்தியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. முன்னதாக, மேல்பாதி ஊரின் காலனி பகுதியில் வசித்து வரும் பட்டியலின மக்கள், திரெளபதி அம்மன் கோயிலுக்குள் நுழையக் கூடாது என அதே பகுதியில் வசித்து வரும் வேறு ஒரு பிரிவினரைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், திரெளபதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. அந்த நேரத்தில், திரெளபதி அம்மன் கோயிலுக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், கோயிலுக்குள் நுழைந்த பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் பட்டியலினத்தைச் சேர்ந்த பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல், இந்த சம்பவத்தை தொடர்ந்து மேல்பாதி கிராமத்தில் வாழ்ந்து வரும் பட்டியலின மக்களிடையேயும், மற்றொரு சமுதாய மக்களிடையேயும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அழைத்துச் செல்வதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் தலைமையில் பல முறை சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்ததால், மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலை பூட்டி சீல் வைக்க விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இந்நிலையில், 9 மாதங்களுக்கு பின்னர் கோயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அமைச்சராக பதவியேற்க பொன்முடிக்கு ஆளுநர் அழைப்பு.. ஒதுக்கப்படவுள்ள இலாகா என்ன? - Governor RN Ravi Invited Ponmudi

ABOUT THE AUTHOR

...view details