தமிழ்நாடு

tamil nadu

“பாமகவின் பிரச்சாரத்திற்கு அவர்களுக்கு வாக்குகள் கிடைத்துள்ளது” - அன்னியூர் சிவா பேட்டி! - Vikravandi by election results

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 13, 2024, 10:46 PM IST

Anniyur Siva: தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஸ்டாலின் முதல் தொண்டர்கள் வரை அனைவருக்கும் நன்றி என விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா கூறியுள்ளார்.

Anniyur siva
அன்னியூர் சிவா (Credits - ETV Bharat Tamil Nadu)

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து, அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கினார்.

அன்னியூர் சிவா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்னியூர் சிவா, “நடந்து முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெறப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் உதயசூரியன் சின்னம் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தினுடைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் மூன்றாண்டு சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி இது. ஸ்டாலின் என்னை வேட்பாளராக அறிவித்தார். அனைத்து அமைச்சர்களுக்கும் சற்றும் களைப்படையாமல் தேர்தல் பணியாற்றினர். அமைச்சர்கள் மற்றும் இத்தேர்தலுக்கு பணிபுரிந்த திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கடந்த 11ஆம் தேதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை 32 நாட்களாக என்னோடு அல்லும் பகலும் அயராது பாடுபட்ட மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன் கௌதம சிகாமணி, தொகுதி முழுக்க வலம் வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உதயசூரியன் சின்னத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்.

எதிர்கால தமிழகத்தை வழிநடத்துகிற இளைஞர்களின் எழுச்சி நாயகன் உதயநிதி ஸ்டாலினுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கும் நன்றி. எனக்கு வாக்களித்த மக்களுக்கும், என்னை திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதய சூரியத்தில் போட்டியிட்ட வாய்ப்பு அளித்த ஸ்டாலினுக்கும் என் வாழ்நாள் முழுவதும் நன்றியுள்ளனாகவும், உண்மையாக விசுவாசமாக இருப்பேன்” என்றார்.

தொடர்ந்து, பாமக வேட்பாளர் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், “அவர்கள் அவர்களுடைய பிரச்சாரத்தை செய்தார்கள். அதற்குண்டான வாக்குகளை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். எங்கள் தலைவருடைய சாதனைகளைச் சொல்லி நாங்களும் எங்களுடைய திமுக தொண்டர்களும், அமைச்சர்களும் பிரச்சாரம் செய்தோம். அதற்குரிய பலன்களை வாக்குகளை நாங்கள் பெற்று இருக்கிறோம்.

முன்னதாக, ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று ஸ்டாலினிடம் சொல்லி இருந்தோம். ஆனால், 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறோம். இருந்தாலும், நாளை முதலைமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்றதற்கான வாழ்த்துக்களை அவரிடம் பெறுவேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க:விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்.. அதிமுகவின் வாக்குகள் யாருக்கு சென்றது?

ABOUT THE AUTHOR

...view details