தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்” - தவெக தலைவர் விஜய் கடிதம்!

வரும் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியின் தவெகவின் முதல் மாநாடு நடைபெற உள்ள நிலையில், தவெக தலைவர் இம்மாநாடு தொடர்பாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தவெக கொடி மற்றும் விஜய்
தவெக கொடி மற்றும் விஜய் (Credits - TVK Vijay Updates)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்.27-ம் தேதி விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெற இருக்கிறது. இதற்கான மேடை, பார்க்கிங் உள்ளிட்ட ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், மாநாட்டுக்கான ஏற்பாடுகள் 95 சதவீதம் முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், தவெக கட்சியின் தலைவர் விஜய் இம்மாநாடு தொடர்பாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நம் கட்சியின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது. மாநாடு நிகழப் போகும் தருணம், நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது.

உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை.

அத்திருவிழாவைக் கொண்டாடுவதற்காக, பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கட்சிக் கொடியைக் கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள். உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்.

வாருங்கள், மாநாட்டில் கூடுவோம். நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம். வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details