வேலூர்:தமிழக முதலமைச்சரின் முக்கிய திட்டங்களில் ஒன்றான 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் படி மாதத்திலும் ஏதாவது ஒரு புதன்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் காலை 9 மணி முதல் அடுத்த நாள் காலை 9 மணி வரை 24 மணி நேரம் சம்பந்தப்பட்ட வட்டத்திற்குள்ளேயே தங்கி, அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து, அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுவர்.
அதன்படி வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்று காலை 10.00 மணி முதல் இன்று காலை வரை ஆய்வுகளைச் செய்தார். இதில் காட்பாடி விருதம்பட்டு மாநகராட்சி உருது ஆரம்ப பள்ளி மற்றும் காந்திநகர் கிழக்கு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாணவ, மாணவிகளுக்கு இன்று வழங்கப்பட்ட உணவின் தரத்தை ஆய்வு செய்தார். மேலும் நாள்தோறும் அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி சரியான நேரத்தில் உணவு வழங்கப்படுகிறதா என்பதையும், வழங்கப்பட்ட அட்டவணையின்படி உணவு சமைக்கப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார்.
ஆட்சியரின் அறிவுரை:தொடர்ந்து காட்பாடி அருகே உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். அப்போது மாவட்ட ஆட்சியர் பேசியதாவது," ஒவ்வொரு வருக்கும் 12 ஆம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்க வேண்டும் என்ற நோக்கம் இருக்க வேண்டும்.
ஒரு மனிதனுக்கு தன்னுடைய வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான காலம் எதுவென்றால் பள்ளி பயிலும் காலமே ஆகும். ஒவ்வொருவருக்குமே தனித்தனி திறமைகள் உள்ளது. முழு மதிப்பெண் பெறுபவர்கள் மட்டுமே திறமையுள்ளவர்கள் கிடையாது. ஒவ்வொருவருக்கும் உள்ள திறமைகளை கண்டறிந்து வெளியே கொண்டு வர வேண்டும். இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு பாடத்திட்டத்தை படித்தாலும் நன்றாக படித்தால் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன.