திருச்சி: சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அரியலூரில் உள்ள கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. மின்னணு வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிடுவதற்காக, இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சிக்கு வந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது, “சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் பெட்டி அரியலூரில் வைக்கப்பட்டுள்ளது. அதை பார்வையிடுவதற்காக இன்று செல்கிறேன். ஏற்கனவே, விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தில் சிசிடிவி கேமராக்கள் அரை மணி நேரம் செயலிழந்துள்ளது. இதுபற்றி விசிக வேட்பாளர் ரவிக்குமார் தேர்தல் அலுவலரிடத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இதேபோல நீலகிரி, ஈரோடு பகுதிகளிலும் சிசிடிவி கேமரா செயலிழந்துள்ளது சந்தேகத்திற்கு இடமான சில குளறுபடிகள் நடந்துள்ளன. அரியலூரில் வைக்கப்பட்டுள்ள சிதம்பரம் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுதலை சிறுத்தை கட்சியினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அந்தந்த தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் சிசிடிவி இயந்திரங்களைக் கண்காணிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவைகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்துவது போல் அமைந்துள்ளது. அவருடைய நிலையை மறந்து, பொறுப்பை மறந்து மிகவும் கீழிறங்கி போய் விமர்சனங்களை முன் வைக்கிறார். குறிப்பாக, தாலியைப் பறித்து இஸ்லாமியருக்கு கொடுத்து விடுவார் என்ற அளவுக்கு அவர் பேசுவது அவரது பொறுப்புக்கு அழகல்ல. அது அவருடைய அச்சத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
தொடக்கத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கக்கூடும் வகையாக உள்ளது. இந்த பிரச்னையில் யார் மீது குற்றம் சுமத்தப்படுகிறதோ, அவருக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டும். பிரதமருக்கு அனுப்ப வேண்டிய தேர்தல் ஆணையம், அதற்கு மாறாக நட்டாக்கு அனுப்பியது ஏன் என்று விளங்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்த அணுகுமுறை ஆளும் கட்சிக்கு சாதகமான அணுகுமுறையாக இருக்கிறது. பிரதமரை விளக்கம் கேட்பதற்கு கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. 5 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது” என்றார்.