தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சென்னையில் மழைநீர் தேங்காமல் இருப்பதுதான் வெள்ளை அறிக்கை" - இ.பி.எஸ்-க்கு பதிலளித்த உதயநிதி!

மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற இ.பி.எஸ்-ன் அறிக்கைக்கு, "சென்னையில் மழைநீர் தேங்காமல் உள்ளதுதான் வெள்ளை அறிக்கை" என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி
உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி அதன் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் (அக்.14) முதல் கனமழை பெய்ததை அடுத்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் தேங்காமல் தடுக்கும் பணிகளை துரிதப்படுத்தினார்.

இதற்கிடையே, நேற்று மாலை முதல் சென்னையில் மழை குறைந்துள்ள நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களையும் ஊக்கத் தொகையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சென்னையை சுற்றிலும் நேற்று முன்தினம் இரவும், நேற்று பகலிலும் மிக அதிக கனமழை பெய்தது. தமிழக முதலமைச்சரின் ஆலோசனைக்குப் பிறகு அனைத்து அரசு அதிகாரிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் என அனைவரும் களத்தில் பணியாற்றினர்.

இதையும் படிங்க:'மழையால் அல்லல் வேண்டாம்'.. ஏர்போர்ட்டுக்குள் செல்லும் மாநகர பேருந்துகள்.. சென்னை பயணிகள் நிம்மதி!

மேலும், இன்று அதி கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், இதுவரை லேசான மழைதான் பெய்து வருகிறது. வரும் நாட்களில் மீண்டும் கனமழை பெய்தால், அதை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது.

அதேபோல, மழையின்போது நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், மெட்ரோ வாட்டர் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறையைச் சார்ந்த முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "தற்போது சென்னையில் எங்குமே மழை நீர் தேங்கி நிற்காமல் உள்ளதே, இதுதான் வெள்ளை அறிக்கை" என்று பதிலளித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details