தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தரங்கம்பாடி கடல் அலையில் சிக்கி மணமகன், சிறுவன் பலி.. நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு நிகழ்ந்த சோகம்! - death for drown in water

Tharangambadi: திருமண நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு தரங்கம்பாடி கடற்கரைக்கு சுற்றுலா வந்த போது, கடல் அலையில் சிக்கி மணமகனும், சிறுவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

two people died including a boy drowning in mayiladuthurai
கடல் அலையில் சிக்கி இருவர் உயிரிழப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2024, 12:31 PM IST

Updated : Jan 27, 2024, 2:50 PM IST

மயிலாடுதுறை: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மணிக்கூண்டு அருகே உள்ள வீரபத்திரர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி, இவரது மகன் நவீன் குமார்(23). மேலும், கும்பகோணம் செக்கடி தெரிவைச் சேர்ந்த குமார் மகள் நிவேதா(19), இவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நவீன் குமார் மற்றும் நிவேதா இருவருக்கும் நேற்று முன்தினம் (ஜன.25) கும்பகோணத்தில் உள்ள கோயில் ஒன்றில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு, விசேஷத்திற்கு வந்த உறவினர்கள் 25 பேருடன் மணமக்களும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி கடற்கரைக்கு, வேனில் சுற்றுலா சென்றுள்ளனர்.

இந்த நிலையில், மணமக்கள் நவீன் குமார் மற்றும் நிவேதாவுடன் அவர்களது உறவினரான கும்பகோணம் நாராயணபுரம் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் மகன் சரவணன்(12), மூவரும் கடலில் குளித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென மூவரும் கடல் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. அப்போது இவர்களின் அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள், அருகே இருந்த மீனவர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் நிலைய போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, விரைந்து சென்ற அவர்கள் கடலுக்குள் சிக்கிய மூவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் தண்ணீரில் மூழ்கியதில், மணமகன் நவீன் குமார் மற்றும் சிறுவன் சரவணன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிருக்குப் ஆபத்தான நிலையில் இருந்த மணமகள் நிவேதாவை மீட்ட போலீசார் உடனடியாக அருகில் இருந்த பொறையார் அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்காக அனுப்பி, பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது நிவேதாவுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உயிரிழந்த மணமகன் நவீன் குமார் மற்றும் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தரங்கம்பாடி கடலோர காவல் நிலைய போலீசார் மற்றும் பொறையார் சட்டம் ஒழுங்கு போலீசார் இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, திருமண நிச்சயதார்த்தம் நடந்த கையோடு உறவினர்களுடன் சுற்றுலா சென்ற இடத்தில் மணமகன் மற்றும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பணிப்பெண் சித்ரவதை விவகாரம்: திமுக எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் கைது!

Last Updated : Jan 27, 2024, 2:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details