தமிழ்நாடு

tamil nadu

ரூ.24.5 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவை தொடர்ந்து மேலும் இருவர் கைது! - Devanathan Yadav Case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 14, 2024, 5:28 PM IST

DEVANATHAN YADAV CHEATING CASE: நிதி நிறுவன மோசடி வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவரும், பாஜக ஆதரவாளருமான தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேவநாதன் யாதவ், குணசீலன், மகிமைநாதன் புகைப்படங்கள்
தேவநாதன் யாதவ், குணசீலன், மகிமைநாதன் புகைப்படங்கள் (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் 'தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்' என்ற நிதி நிறுவனத்தை தேவநாதன் யாதவ் நடத்தி வருகிறார். தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத் தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 8 முதல் 12 சதவீதம் வரை வட்டி உறுதி என கவர்ச்சியான விளம்பரம் செய்ததை நம்பி தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரம் பேர் நிரந்தர வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்தனர்.

மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த நிதி நிறுவனத்திற்கு சென்னையில் மட்டும் 5 கிளைகள் உள்ளன. மேலும் இந்த நிதி நிறுவனத்தில் குறைந்தபட்ச நிரந்தர வைப்பு நிதி ரூ.1 லட்சம் எனவும், அதிகபட்சமாக எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் செலுத்தும் பணத்திற்கு 8 முதல் 12 சதவீத வட்டி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் அதை நம்பி தமிழ்நாடு முழுவதும் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும், ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலும் ஏராளமானவர்கள் முதலீடு செய்துள்ளனர்.

ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வு தொகை மற்றும் வட்டி பணம் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தினமும் மயிலாப்பூர் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்திற்கு சென்று பணத்தை கேட்டு முறையிட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பலர் இது குறித்து காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் பொருளாதார குற்றப் பிரிவிலும் முறையாக புகார் அளித்துள்ளனர்.

ஆனால் நிதி நிறுவனம் சார்பில் இதுவரை முறையாக பதில் அளிக்காததால் கடந்த ஜூன் மாதம் 6-ஆம் தேதி முதலீட்டாளர்கள் பலர் நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பிரசாத் என்பவர் அளித்த புகார் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் 144 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.24.5 கோடி பெற்று ஏமாற்றியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று திருச்சியில் வைத்து இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவை போலீசார் கைது செய்தனர். மேலும், இதே மோசடி வழக்கு தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குநர்களான குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை இன்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர், கைது செய்யப்பட்டவர்களிடம் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பல கோடி‌ ரூபாய் குறித்து விசாரணை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 23 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details