தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 23, 2024, 9:48 PM IST

ETV Bharat / state

"கள்ளச்சாராய விற்பனை முதலமைச்சருக்கு தெரிந்ததா? இல்லை தெரிந்தும் அமைதி காத்தாரா?"- டிடிவி தினகரன்! - kallakurichi illicit liquor issue

TTV Dhinakaran: கள்ளச்சாராய இறப்பிற்கு முழுக் காரணம் ஆட்சியாளர்களின் நிர்வாக தோல்வி மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தான் என தெளிவாக தெரிகிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் புகைப்படம்
டிடிவி தினகரன் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பம் மற்றும் சிகிச்சையில் இருக்கும் நபர்களை அமமுக தலைவர் டிடிவி தினகரன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எனக்கு வந்த தகவலின் படி 20 பேரின் உடல்நிலை சீராக இல்லை. சிகிச்சைப் பெற்று வருபவர்கள் பூரண குணமடைந்து வரவேண்டும் என பிரார்த்திக்கிறேன். கள்ளச்சாராய இறப்பிற்கு முழு காரணம் ஆட்சியாளர்களின் நிர்வாக தோல்வி மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தான் என தெளிவாக தெரிகிறது.

காவல் நிலையம் மிக அருகே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்துள்ளது. கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக முதலமைச்சருக்கு தெரிந்ததா? இல்லை தெரிந்தும் அமைதி காத்தாரா? . ஏற்கனவே பொதுவெளியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆளும் கட்சி நிர்வாகிகளின் நடவடிக்கை பயமாக இருப்பதாகக் கூறி இருக்கிறார்.

கள்ளச்சாராய உயிரிழப்புக்கு தமிழக முதலமைச்சர் முழு பொறுப்பேற்று காரணங்கள் சொல்லாமல் இனிமேலாவது தமிழகத்தில் இது போன்று நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் வரையிலாவது பார்த்துக் கொள்ளவேண்டும். இதற்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம், அடாவடித்தனங்கள் தான் கள்ளச்சாராய உயிரிழப்புக்குக் காரணம். காவல்துறையை செயல்படவிடாமல் ஆளுங்கட்சியினர் தடுத்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் சொல்கிறார்கள். கட்சி நிர்வாகியை கட்டுபடுத்தி காவல் துறையையும், மாவட்ட நிர்வாகத்தையும் சரியாகச் செயல்பட விட வேண்டும்.

ஒரு நபர் ஆணையம்: ஒரு நபர் ஆணையம் மூலம் தூத்துக்குடி சம்பவத்தில் விசாரணை நடத்தி என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள். 22 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அது போன்று கள்ளச்சாராய வழக்கும் அமைந்துபோகும். மூன்று மாதம் வரை காந்தியைப் போல் திமுக அரசு செயல்படும். பொதுமக்களே கள்ளச்சாராய விற்பனைக்கு சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்டச் செயலாளர்கள் தான் காரணம் என குற்றம் சாட்டுகின்றனர்.

மக்கள் சொல்வதைத் தான் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார். அதனால் தான் சிபிஐ விசாரணை தான் சரியான நடவடிக்கையாக இருக்கும். கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க சிபிஐ விசாரணை நடத்தினால் தான் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்கள் திருந்துவார்கள்.

எனவே, திமுக கட்சிக்காரர்கள் தான் கள்ளச்சாராய உயிரிழப்பிற்குக் காரணம் என்பதால் முதலமைச்சர் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை சந்திக்கவில்லை என எனக்கு தோன்றுகிறது. மரக்காணம் சம்பவத்துக்குப் பிறகு கள்ளச்சாராய விற்பனையைத் தடுத்து விட்டதாக திமுக கூறினார்கள்.

ஆனால் மீண்டும் கள்ளச்சாராய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, உயிரிழந்த குடும்பத்தினருக்கு பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிப்பது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடாமல் இருக்க தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும். கள்ளச்சாராய வழக்கில் முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்" என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மயிலாடுதுறை பாஜக தலைவர் அகோரம் அதிரடி நீக்கம்.. காரணம் என்ன? - Agoram removed from bjp in charge

ABOUT THE AUTHOR

...view details