திருச்சிராப்பள்ளி: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் பட்டியல் சமூக மக்கள் அதிகம் வாழும் பகுதியில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரம் தமிழ்நாட்டை உலுக்கியது. இதன் தாக்கம் தணிவதற்குள், திருச்சி காந்தி மார்க்கெட் அருகேயுள்ள 20-ஆவது வார்டு வடக்குத் தையக்காரத் தெருவில் இருக்கும் நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பிப்ரவரி 5 அன்று பரபரப்பான சூழல் நிலவியது.
உடனடியாக இதை சோதனை செய்துபார்த்த மாநகராட்சி நிர்வாகிகள், தொட்டியை சுத்தம் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர். தொட்டியில் கிடந்தது மனிதக் கழிவுகள் இல்லை எனவும், அது உணவுக் கழிவுகள் என்றும் மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாசிலாமணி, தனியார் பள்ளி மாணவி பாலியல் வன்முறை விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
உண்மை நிலவரம் இதுதான்
அப்போது இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “திருச்சி மாநகராட்சி வார்டு 20 தையல்கார தெரு பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்ததாக புகார்கள் எழுந்துள்ளது.
ஆனால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அந்த பகுதியில் வசிக்கக் கூடிய யாரோ ஒரு நபர் உணவுப் பொட்டலங்களை வீசி விட்டு சென்றுள்ளார். இது குறித்து முறையான விசாரணை நடைபெற்று வருகிறது. பொய்யான தகவல்களை பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று எச்சரித்தார்.
மாநகராட்சி விளக்கம்
மேலும், தமிழ்நாடு அரசு தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, “திருச்சி மாநகராட்சி 2வது வார்டில் குடிநீர் அல்லாத பிற பயன்பாட்டிற்காக ஆழ்குழாய் கிணற்றுடன்கூடிய தண்ணீர் தொட்டி உள்ளது. 05.02.2025 அன்று இந்தத் தொட்டியின் மேல் பகுதியில் மனித கழிவுகள் உள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.