சென்னை:சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் (18) ஒருவர் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றார். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக, இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் பகுதிநேர வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண் கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, கடை உரிமையாளர் இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதுகுறித்து அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கடை உரிமையாளரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கந்து வட்டி பிரச்னை : சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணாநகர், வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ரவுடி ராம் என்கிற ராமகிருஷ்ணன் (40). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை, கொள்ளை உட்பட 28க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், ரவுடி ராமகிருஷ்ணன் அரும்பாக்கம் ரவுடி ராதாவின் சகோதரர் ஆவார். இந்நிலையில் ரவுடி ராமகிருஷ்ணனிடம் அப்பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளர்கள் சிலர் கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர்.
குறிப்பாக ரூ.10 ஆயிரம் வாங்கினால் ஒரு வாரத்திற்கு வட்டியாக ரூ.1000மும், அதேபோல் ரூ.50 ஆயிரத்திற்கு வாரம் ரூ. 5 ஆயிரமும் என ஸ்பீடு வட்டி வசூத்து வந்துள்ளார். இந்நிலையில் இவரிடம் கடன் வாங்கிய கூலி தொழிலாளி ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் கடனை செலுத்த முடியாமல் போனதால் ஆத்திரமடைந்த ரவுடி ராமகிருஷ்ணன் தனது அடியாட்களுடன் அவரது வீட்டிற்கு சென்று அடித்து உதைத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.