சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) குருப்-4 பணிகளில் 8,932 இடங்களை நிரப்பப்படும் என அறிவித்துள்ளது. மேலும், அறிவிப்பின் அடிப்படையில் குருப்-4 பணியிடங்களில் 6,244 இடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி மேலும் 480 இடங்களும், அக்டோபர் 9 ஆம் தேதி 2,208 பணியிடங்களும் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவிகளில், கிராம நிர்வாக அலுவலர்(VAO), இளநிலை உதவியாளர் , தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளர்க் - 3, தனிச் செயலாளர் , இளநிலை நிர்வாகி, பால் பதிவாளர் , ஆய்வக உதவியாளர், பில் கலெக்டர் , தொழிற்சாலை மூத்த உதவியாளர் , வனப் பாதுகாவலர், இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைக் கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியிட்டது. பிப்ரவரி 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வை மொத்தம் 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பிருந்த நிலையில்,15 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் தேர்வெழுதி உள்ளனர். 4 லட்சத்து 45 ஆயிரத்து 115 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் இந்த தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. 6,244 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்ற நிலையில், செப்டம்பர் மாதம் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டது.மேலும் இந்தப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்த நிலையில், அக்டோபர் 9 ஆம் தேதி(இன்று) கூடுதலாக 2,208 பணியிடங்களை சேர்த்து அறிவித்துள்ளது.
அதன்படி, கிராம நிர்வாக அலுவலர் 400, இளநிலை உதவியாளர் பிணையற்றது 3,458, இளநிலை உதவியாளர் பிணை உள்ளது 69, பில் கலெக்டர் 99, தட்டச்சர் 2,360, சுருக்கெழுத்தர் நிலை 3 ல் 642, இளநிலை உதவியாளர் வக்பு வாரியம் 32, சுருக்கெழுத்தர் நிலை 3 தமிழ்நாடு பால் உற்பத்தி கூட்டுறவு இணையம், கூட்டுறவு நிறுவனங்களில் 17, தடயவியல் துறையில் 32, வனத்துறையில் 216, வீட்டுவசதி வாரியம் 22 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான இடம் தனியாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.