தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜய்யை கண்டு தமிழ்நாடு அரசும் அரசும் அஞ்சவில்லை - சபாநாயகர் அப்பாவு - APPAVU

தவெக தலைவர் விஜய்யை கண்டு தமிழ்நாடு அரசும் அஞ்சவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

நீச்சல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய சபாநாயகர் அப்பாவு
நீச்சல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய சபாநாயகர் அப்பாவு (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 22, 2025, 3:19 PM IST

திருநெல்வேலி: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நெல்லையில் தொடங்கியது. இதில் 14, 17 மற்றும் 19 வயதுகளுக்கு உட்பட்டவர்களுக்கு என மூன்று பிரிவுகளில் மாணவர்கள், மாணவிகள் என இரு பாலருக்குமான நீச்சல் போட்டிகள் பாளையங்கோட்டை சீவலப்பேரி சலையில் சர்வதேச தரத்துடன் அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தில் நடைபெற்றது. இதில் ஃப்ரீ ஸ்டைல், பட்டர்பிளை, பிளாக் ஸ்ட்ரோல் என 47 வகைகளில் நீச்சல் போட்டிகள் நடத்தப்படுகிறது.

இந்த விளையாட்டு போட்டியின் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து , வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதில் முதலிடம் பிடித்த வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுகிறார்கள். தமிழக முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1300 மாணவிகள் 2065 மாணவர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளனர் இன்று தொடங்கி 25ஆம் தேதி வரை இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மாநில சட்டப்பேரவை சபாநாயகர்கள் மற்றும் துணை சபாநாயகர்கள் கூட்டமைப்பு சார்பில் பீகாரில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று தமிழ்நாடு ஆளுநர் 3 ஆண்டுகளாக சட்டசபையில் நடந்து கொண்டது தொடர்பாகவும், அவ்வாறு ஆளுநர்கள் செயல்படக் கூடாது எனவும் வலியுறுத்தி பேசினேன்.

தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுப்பது கிடையாது. தீர்மானங்கள் குறித்து யோசிக்காமல் அதனை திருப்பி அனுப்பி விட்டு மீண்டும் அந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தும் ஒப்புதல் கொடுக்காமல் இருந்து வருவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னை குறித்தும் பேசினேன். தமிழ்நாடு அரசு கொண்டு வரும் அனைத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டதையும் தெளிவாக எடுத்துரைத்தேன். இது குறித்து பேச அனுமதி மறுத்ததுடன் உங்களது பேச்சு பதிவாகாது என ராஜ்ஜிய சபா துணைத் சபாநாயகர் தெரிவித்தார்.

ஆளுநர் குறித்து தவறாகவும் உண்மைக்கு புறம்பாகவும் எந்த கருத்தும் என்னால் பேசப்படவில்லை. ஆனால் அதனை துணை சபாநாயகர் பதிவு செய்ய மாட்டேன் என சொல்லியிருப்பது ஏற்புடையதல்ல. அவர் என்ன நோக்கத்திற்காக பதிவு செய்ய மாட்டேன் என சொல்லி உள்ளார் என்பதும் தெரியவில்லை. ஆகையால் ஜனநாயக முறைப்படி எனது எதிர்ப்பை காட்டும் வகையில் வெளிநடப்பு செய்தேன்.

நான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஞானசேகரன் என்ற நபர் எனக்கு சால்வை அணிவித்தார் அவரது பெயரை கேட்டு நகைச்சுவையாக அவரை மையப்படுத்தி பேசியதை சர்ச்சையாகி விட்டனர். வெட்டி ஒட்டி அந்த காணொலியை வெளிப்படுத்தி உள்ளனர். முழு காணொலியைப் பார்த்தால் அந்த விவகாரத்தின் உண்மை நிலை தெரியும்.

யுஜிசி என்பது எந்த ஒரு அதிகாரமும் இல்லாத அமைப்பு. மாநில அரசு தான் அனைவருக்குமான கல்வி சாலையை உருவாக்குகிறது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் இன்ஸ்டியூட் ஆக மட்டுமே உள்ளன. யுஜிசி ஆய்வு நிறுவனங்களுக்கு மட்டுமே பணம் கொடுப்பார்கள். கல்வி நிறுவனங்களை மாநில அரசுகளே நடத்தி வருகின்றன. பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர் தான் இருக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பரந்தூர் விமான நிலையம் அந்த பகுதியை விட்டு வேறு எங்கும் செல்லாது. பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். விஜய்யை கண்டு தமிழ்நாடு அரசுக்கு எந்த பயமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் நோக்கத்தோடு சிலர் செயல்படுகின்றனர். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள் நடத்த வேண்டும் என அரசு தெளிவாக தெரிவித்துள்ளது. ஆனால் நீங்கள் சொல்லும் நபர் திருமண மண்டபத்தில் தான் நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த நபர் செயல்படுகிறார் என விஜய் குறித்து மறைமுகமாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details