தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழில் முனைவோர் ஆக ஒரு வாய்ப்பு! 100% உதவித்தொகையுடன் மதுரையில் பயிற்சி..மிஸ் பண்ணிடாதீங்க..! - TN Govt Entrepreneurship Training

TN Govt Entrepreneurship Training: தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனமும் இடிஐ இந்தியா நிறுவனமும் இணைந்து நடத்தும் ஓராண்டு தொழில் முனைவோர் பட்டயப்படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்படுகின்றன.

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 8:57 AM IST

Entrepreneurship Development Training Program
தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம் ஆலோசனைக்கூட்டத்தில் எடுத்த புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று (மே 14) தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன கூடுதல் தலைமை செயலர் சி.உமாசங்கர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா முன்னிலையில், "வாருங்கள் அனைவரும் தொழில் முனைவோர் ஆகலாம்" என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII TN) மற்றும் இடிஐ இந்தியா (Entrepreneurship Development and Innovation Institute - India) நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் ஓராண்டு தொழில் முனைவோர் பட்டயபடிப்பு (P.G Diploma in Entrepreneurship and Innovation) நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன கூடுதல் தலைமை செயலர் சி.உமாசங்கர் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது, "தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் 2001ஆம் ஆண்டு சிறு/குறு தொழில்துறை நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.

இந்நிறுவனத்தின் நோக்கம் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் கண்டுபிடிக்கும் பொருள்களின் மூலம் தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த மாநிலமாக உருவாக்குவது ஆகும். இந்நிறுவனத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து கல்லூரி மாணவ, மாணயர்களுக்கும் கடந்த 7 ஆண்டுகளாக இப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சிக்காக வருடந்தோறும் ரூ.4 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் தற்போது 1714 நிறுவனங்கள் இணைந்துள்ளன. இந்நிறுவனங்கள் தற்போது தனியாக பயிற்சி வழங்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளன. தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தலைமையிடம் அகமதாபாத் ஆகும். இந்நிறுவனம் சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் கீழ், இடிஐ இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்திற்கு 500 மாணவ, மாணவியர்களை வைத்து ஓராண்டு தொழில் முனைவோர் பட்டயபடிப்பு பயிற்சி (Entrepreneurship Development and Innovation Training) வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாணவ, மாணவியர்களை வைத்து நடத்தப்படும் ஓராண்டு தொழில் முனைவோர் பட்டயப்படிப்பு பயிற்சியில் சேர்க்கைக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பயிற்சியில் சேர்வது எப்படி?: இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.80 ஆயிரம் மற்றும் கூடுதல் செலவினங்களுக்காக ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் சேருவதற்கு வயது வரம்பு 25 ஆகும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் எஸ்சி/எஸ்டி மாணவர்களாக இருந்தால் 30 வயது வரை பயிற்சியில் சேருவதற்கு வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இப்பயிற்சியில் சேருவதற்கு ஏதாவதொரு பாடத்திட்டத்திட்டத்தில் இளநிலை பட்டப் படிப்பு பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சியானது அனுபமிக்க பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் சேருவதற்கு 60 மதிப்பெண்களுக்கு ஆன்லைன் தேர்வும், 40 மதிப்பெண்களுக்கு நேரடி கலந்தாய்வும் நடத்தப்படும். இந்த இரண்டு நிலைகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு அனுமதிக்கப்படுவர்.

100% உதவித்தொகை: 100 சதிவிகிதம் கல்வி உதவித்தொகை பெற வழிவகை உள்ளது. சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களும் இப்பயிற்சி வகுப்பில் பங்குபெற வாய்ப்பு இருக்கிறது. இப்பயிற்சி தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கான படிப்பாகும். ஓராண்டு தொழில் முனைவோர் பட்டயப்படிப்பு வகுப்பானது வருகின்ற ஜீலை மாதம் 01ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பு குறித்த மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.editn.in என்ற மின்னஞ்சல் முகவரியின் வாயிலாக கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்" என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உயல்கல்வி நிறுவன பிரதிநிதிகள், சிறு/குறு தொழில் சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் பிரதிநிதிகள், தொழில் முனைவோர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த லஞ்சம்; பெண் தாசில்தார் மற்றும் காவலர் கைது!

ABOUT THE AUTHOR

...view details