புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்ட அதிமுக நகர கழகம் சார்பில், நேற்று அண்ணா சிலை அருகே கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து, பலாப்பழம், தர்பூசணி, குளிர்பானங்கள், நீர்மோர், பானகம், ஜூஸ் வகைகள் உள்ளிட்டவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. மேலும், தினந்தோறும் அந்த தண்ணீர் பந்தலில் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், "தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், சுகாதாரத்துறை முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. வெயிலால் உயிரிழப்புக்கள் ஏற்படக்கூட அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே, உடனடியாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தமிழகத்தில் பறவை காய்ச்சல் குறித்த அச்சம் நிலவி வருகிறது. எனவே, தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் உள்ளனவா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். எல்லை பகுதிகளில் தீவிர பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளது.
குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய அளவிலான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும். நானே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன். மேலும், தற்போது விற்கப்படும் பழ வகைகள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகிறது.
எனவே, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பழ வகைகள் இயற்கையாக பழுக்க வைக்கப்படுகிறதா? அல்லது செயற்கையாக பழுக்க வைக்கப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்த வேண்டும். இதனை முன்பே செய்து சுகாதாரத்துறை விழிப்போடு செயல்பட்டு இருந்தால், பொது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களும், வினாக்களும் எழுவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, பொதுமக்கள் மத்தியில் எழும் சந்தேகங்களுக்கு, சுகாதாரத்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து பதில் அளிக்க வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:மக்களவை தேர்தலை புறக்கணித்த ராஜஸ்தான் கிராமம்! என்ன காரணம்? - Lok Sabha Election 2024