தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயம் குறித்து அரசு பதிலளிக்க உத்தரவு! - PRIVATE MEDICAL COLLEGES FEES ISSUE

தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசும், கட்டண நிர்ணயக் குழுவும் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court
சென்னை உயர்நீதிமன்றம் -கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2024, 4:24 PM IST

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட தனியார் தொழிற்கல்வி கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க கட்டணம் நிர்ணய குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு 2022-2023, 2023-2024, 2024-2025ஆம் ஆண்டுகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்து, நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையிலான கட்டண நிர்ணய குழு கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணமாக 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்துள்ளது.

ஆனால், தனியார் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயுமாக கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்துள்ளது பாரபட்சமானது.

தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள வசதிகள் தான், தனியார் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ளது. மேலும், ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்பட தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கான செலவுகள் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், தனியார் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளுக்கு அவ்வளவு செலவுகள் இல்லை.

இதையும் படிங்க:தேர்தல் வழக்கு: ராபர்ட் ப்ரூஸ் தரப்பு விளக்கமளிக்க உத்தரவு!

இது குறித்து, தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை விட, தனியார் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளுக்கு அதிக கட்டணம் நிர்ணயித்துள்ளது குறித்து கட்டண நிர்ணயக் குழுவுக்கு மனு அளித்த போதும் அந்த மனு பரிசீலிக்கப்படவில்லை.

ஆகவே, தனியார் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சங்கம் சார்பாக மூத்த வழக்குரைஞர் ஐசக் மோகன்லால் ஆஜராகி வாதாடினார். வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், இந்த மனு குறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், கட்டண நிர்ணயக் குழுவிற்கும் உத்தரவிட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details