சென்னை:பெங்களூரில் இருந்து விமான மூலம் சென்னை வந்தடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை மதித்து தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்று டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை கைவிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அத்துறையின் அமைச்சரை நேரில் சந்தித்த போது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்ப்ளிப்போம் தமிழ்நாடு அரசினை மீறி எதுவும் செய்யமாட்டோம் என்று சொன்னார். தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.
தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை யார் உரிமைக் கோருவது என்பது அல்ல பிரச்சனை. அப்பகுதி மக்களின் வலுவான கோரிக்கை இது. அதற்காக சட்டமன்றத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றபட்டது. அந்த வகையில் மக்களுக்கான வெற்றி. ஆளுநர் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும் கலாச்சாரத்திற்கும் மதிப்பளிக்கவில்லை. அவர் ஏற்கனவே உள்வாங்கிய கருத்திற்கு ஏற்ப செயல்படுகிறார். சட்டப்பேரவையை அவமதித்து விட்டு வெளியேறினார். அந்த வகையில் ஆளுநர் தேநீர் விருந்தினை புறக்கணிக்கிறோம்.