திருநெல்வேலி: நெல்லையைச் சேர்ந்த இளைஞர் 6 ஆண்டுகளாக தான் காதலித்த மெக்சிகோ நாட்டு பெண்ணை திருமணம் செய்து சொந்த ஊரில் இந்து முறைப்படி திருமணம் வரவேற்பு வைபவம் நடைபெற்றுள்ளது. இதில், இளைஞரின் உறவினர்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள சிவந்திபுரம் கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் பகவதி - அம்மா பொண்ணு தம்பதியினர். இவர்களது மகன் இசக்கிமுத்து (34). இவர் மெக்சிகோவில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஐடியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் தான் வசித்து வந்த குடியிருப்பில், வசித்து வரும் மெக்சிகோவை சேர்ந்த அசுவாணி லோபெஸ் (32) என்ற பெண்ணை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
மெக்சிகோ நாட்டு பெண்ணை கரம் பிடித்த நெல்லை இளைஞர் திருமணம் வரவேற்பு விழா (ETV Bharat Tamil Nadu) அசிவாணி லோபெஸ் மெக்சிகோ நாட்டில் குற்றவியல் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில், இசக்கிமுத்து தனது காதல் குறித்து தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு மருமகள் என்பதால் முதலில் தயக்கம் காட்டிய இசக்கிமுத்துவின் பெற்றோர்கள், பிறகு தனது மகனின் காதலுக்கு பச்சை கொடி காட்டியுள்ளனர்.
இதையடுத்து, மெக்சிகோவில் இருவருக்கும் திருமண நடைபெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது இசக்கிமுத்துவின் சொந்த ஊரான திருநெல்வேலி பாபநாசத்தில் இந்து முறைப்படி இருவருக்கும் திருமணம் வரவேற்பு விழா வைபவம் இன்று (பிப்ரவரி 07) நடைபெற்றுள்ளது. இதில் இசக்கி முத்துவின் உறவினர்கள் மற்றும் மணப்பெண் சார்பில் அவரது தாய் மற்றும் சகோதரர் இருவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
தொடர்ந்து, பாபநாச சுவாமி கோயிலில் இருவரும் சாமி தரிசனம் செய்துள்ளனர். மெக்சிகோவில் மலர்ந்த காதல் கடல் கடந்து இந்தியா வரை பயணித்துள்ளது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.