தமிழ்நாடு

tamil nadu

"என் மகன் இறந்துட்டான் நீ மட்டும் ஜாலியா இருக்கியா?".. முன்பகையால் 3 வயது சிறுவனை கொன்ற நெல்லை பெண்! - 3 Years Old Boy Murder

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 8:41 PM IST

3 Years Old Boy Murder: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் முன்பகை காரணமாக 3 வயது சிறுவனை கொலை செய்து சாக்கு மூட்டையில் வைத்து வாஷிங்மெஷினில் அடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலை செய்யப்பட்ட சிறுவன், கதறி அழும் குடும்பத்தினர்
கொலை செய்யப்பட்ட சிறுவன், கதறி அழும் குடும்பத்தினர் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே ஆத்துகுறிச்சி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு 3 வயதில் மகன் உள்ளார். இவரது மகன் அருகில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை காணவில்லை என குடும்பத்தார் தேடியுள்ளனர்.

உறவினர்கள் கதறி அழும் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடிய நிலையிலும், சிறுவன் கிடைக்காததால் நீர் நிலைகளில் விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் அப்பகுதியை சுற்றியுள்ள நீர் நிலைகளிலும் தேடியுள்ளனர். தொடர்ந்து சிறுவன் குறித்த தகவல் ஏதும் கிடைக்காததால், பெற்றோர் ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுவன் எதிர் வீட்டிற்கு சென்றதாக சிலர் கூறி உள்ளனர். இதனையடுத்து போலீசார் எதிர்வீட்டிற்குச் சென்று அவ்வீட்டின் பெண்மணி தங்கத்திடம்(40) விசாரணை செய்துள்ளனர். அப்போது தங்கம் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் சிறுவனை கொலை செய்ததை தங்கம் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. மேலும், கழுத்தை நெரித்து சிறுவனை கொலை செய்து, உடலை சாக்குமூட்டையில் கட்டி, வீட்டில் உள்ள வாஷின் மெஷினுக்குள் மறைத்து வைத்ததும் தெரியவந்தது.

பின்னர் வாஷின் மெஷினிலிருந்து சிறுவனின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக ராதாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தங்கத்தை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது 15 வயது மகனை இழந்துள்ளார். விபத்து ஒன்றில் சிக்கி அவர் உயிரிழந்ததாக தெரிகிறது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே எதிர்வீட்டு விக்னேஷ் குடும்பத்திற்கும், தங்கம் குடும்பத்திற்கும் தகராறு இருந்து வந்த நிலையில் அவர்கள் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருப்பதை சகித்து கொள்ள முடியாமல் இன்று தனியாக சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்று கொலை செய்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க :கொலை செய்யப்பட்டு வாஷிங் மெஷினில் மூட்டைக்கட்டி வைக்கப்பட்ட மூன்று வயது சிறுவன்; திருநெல்வேலியில் கொடூர சம்பவம் - 3 years old male baby child murder

ABOUT THE AUTHOR

...view details