தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் சாலை பள்ளங்களால் பறிபோன 3 உயிர்கள்! பருவமழை தொடங்கும் முன்னரே பரிதாபம்

சென்னையில் கடந்த 2 வாரத்தில் சாலையில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக மாநகராட்சி சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மற்றும் பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாகவும் விவரிக்கிறது இச்செய்தி.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 23 hours ago

சென்னை மாநகராட்சி, பள்ளம்
சென்னை மாநகராட்சி, பள்ளம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னையில் முறையாக சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் சரிவர முடியாமல் இருப்பதால், சென்னையில் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அசோக்நகர் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தது, ஆலந்தூர் அருகே சுரங்கப்பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஐடி ஊழியர் பள்ளத்தில் சிக்கி சாலையில் தவறி விழுந்து உயிரிழந்தது, வேளச்சேரி பீனிக்ஸ் மால் அருகே இருந்த பள்ளத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர் தவறி விழுந்து உயிரிழந்தது என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொதுமக்கள் கோரிக்கை :பருவமழை தொடங்குவதற்கு முன் சாலைகள் பராமரிப்பு மற்றும் மழைநீர் வடிகால்வாய் தூர்வாரும் பணிகள் முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவித்திருந்த நிலையில் சென்னையின் பெரும்பாலான சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படும் சூழல் உருவாகி இருப்பதால், சாலைகள் பராமரிப்பு பணியினை சென்னை மாநகராட்சி விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் ஏற்படும் விபத்து குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், "சென்னை வேளச்சேரி சாலையில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்த நபர், குண்டும் குழியுமான ஆலந்தூர் சுரங்கப்பாதையில் நிலை தடுமாறிய தனியார் நிறுவனத்தின் இளம்பெண் என கடந்த ஒருவாரத்தில் மட்டும் இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமே சாலைப் பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளங்கள், முறையாக மூடப்படாததன் காரணமாக அதில் தேங்கி நிற்கும் மழைநீரில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாவதையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க தவறிய தமிழக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

இதையும் படிங்க :சென்னை: சாலையில் இருந்த பள்ளத்தால் அரசு பேருந்து ஓட்டுநர் மரணம் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

பிரதான சாலைகளில் ஏற்பட்டிருக்கும் பள்ளங்கள், மழைநீர் வடிகால்வாய் பணிக்காக தோண்டப்பட்டு மூடப்படாமல் இருக்கும் குழிகள் என ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான பள்ளம், மேடுகளை கடந்து உயிரை பணயம் வைத்து பயணம் செய்ய வேண்டிய அவலநிலைக்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தள்ளப்பட்டுள்ளனர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகளில் காணப்படும் பள்ளங்களை சீரமைப்பதில் மாநகராட்சி நிர்வாகம் காட்டும் அலட்சியம் குறித்தும், ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் குறித்தும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே விபத்துக்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சேதமடைந்திருக்கும் சாலைகளை உடனடியாக சீரமைப்பதோடு, வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் சாலை பராமரிப்பு குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலையில் பல்வேறு இடங்களில் உள்ள பள்ளங்கள் விபத்துகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கிறது.

இதையும் படிங்க :தோழி கண்முன்னே பறிபோன உயிர்.. தலை நசுங்கியதால் புகைப்படத்துடன் இறுதிச்சடங்கு!

விபத்து நிகழ்வதற்கு காரணம் : சாலைகளை போடும்போது அமைக்கக்கூடிய வேகத்தடைகளுக்கு பெயிண்ட் அடிக்காமல் இருப்பதாலும் விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும், கழிவுநீர் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால் வாய்களில் மூடிகள் (manhole cover) சாலையை விட மேல் எழும்பியும், சில இடங்களில் சாலைக்கு கீழும் இருப்பதால், அதன் மூலமாகவும் விபத்துகள் ஏற்படுகிறது. பருவமழை தொடங்க சில நாட்கள் இருக்கும் நிலையில், பல இடங்களில் மழைநீர் வடிகால்வாய்கள் தூர் வாராமல் உள்ளது. மேலும் சாலைகளின் பராமரிப்பு பணிகளும் தொடங்காமல் இருக்கிறது.

அதேபோல் மெட்ரோ வாட்டர் குழாய்களில் ஏற்படும் கசிவினால் தண்ணீர் தேங்கி சாலைகள் பழுதடைகிறது. அதையும் முறையாக பராமரிப்பு செய்யாமல் இருப்பதால், அந்த பகுதிகளில் பள்ளம் ஏற்பட்டு விபத்து உண்டாக்கக்கூடிய சூழல் ஏற்படுகிறது.

பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சென்னையின் சாலைகளில் தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து தண்ணீர் தேங்கக்கூடிய இடங்களில் சாலைகளை பராமரிப்பு செய்து விபத்துக்களை உடனடியாக தடுத்து உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

மேலும், சாலைகள் பராமரிப்பு இல்லாமல் ஏற்படும் விபத்துகளுக்கு யார் உரியவர்கள் என கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இதுவரை அப்படி ஒரு நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருக்கிறது. விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதால் அதிகாரிகளுக்கு அதற்கான பொறுப்புகள் வராமலே போகிறது.

அரசு அலட்சியமாகவே இருப்பதால் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. சென்னையின் சாலைகள் சரிவர இல்லையென ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தோம். இதில், பாதி சாலைகள் மட்டுமே சரி செய்யப்பட்டு இருக்கிறது. இன்னும் பாதி சாலைகளில் சரிசெய்யாமல் இருக்கிறது.

சென்னை மாநகராட்சி எப்போது சரி செய்யும் என கேள்வி எழுந்திருக்கிறது. பருவமழை தொடங்க இருப்பதால் உடனடியாக மாநகராட்சி நடவடிக்கைகளை எடுத்து விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, "அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தள பதிவில் பதிவிட்ட இரு சாலைகளுமே சென்னை மாநகராட்சிக்குள் வராது. அந்த இரு சாலைகளுமே மாநில நெடுஞ்சாலைக் கட்டுப்பாட்டில் வருவதால், தமிழக அரசு இதற்கு பதிலளிக்கும். மேலும், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் சாலைகள் பராமரிப்புகள் மற்றும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் விரைந்து முடிக்கப்படும்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details