சென்னை:திருவொற்றியூர் - விம்கோ நகர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் கற்கள் மற்றும் இரும்பு ஸ்பேனர் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லும் மின்சார ரயில்கள் மற்றும் ஆந்திரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருவொற்றியூர், விம்கோ நகர் ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ரயில்வே தண்டவாளங்கள் பாதுகாப்பாக உள்ளதா? எனக் கண்டறிய கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, வ.உ.சி நகர், திருவொற்றியூர், விம்கோ நகர் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாகத் தண்டவாளங்களை ஆய்வு செய்து கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, திருவொற்றியூர் - விம்கோ நகர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தின் மெயின் லைனில் இருந்து லூப் லைனிற்கு மாற்றும் இடத்தில் சிலர் கற்கள் மற்றும் இரும்பு ஸ்பேனரை வைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஆய்விலிருந்த ரயில்வே போலீசார் உடனடியாக அதனை அப்புறப்படுத்தியுள்ளனர்.
மேலும், ரயில் செல்லும் வழித்தடத்தில் கற்கள் மற்றும் இரும்பு ஸ்பேனரை வைத்துச் சென்றது யார்? ரயிலைக் கவிழ்க்க யாரேனும் சதித்திட்டம் தீட்டி தண்டவாளத்தில் கற்களையும், இரும்பு ஸ்பேனரையும் வைத்துச் சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தோடு யாராவது இதைச் செய்துள்ளார்களா? என்ற அனைத்து கோணத்திலும் டி.எஸ்.பி கர்ணன், ஆய்வாளர் சசிகலா, லைன் மேன் ஆகியோர் அடங்கிய ரயில்வே போலீசார் குழு விசாரணை மேற்கொண்டனர்.