தமிழ்நாடு

tamil nadu

கல்லூரி புதிய கட்டடத்தை திறந்து வைத்த துறைமுக தலைவர்; போராட்டத்தில் இறங்கிய காங்கிரஸார்! பின்னணி என்ன? - ponneri College new building issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 11:06 PM IST

Ponneri Arts College New Building Issue: பொன்னேரி அரசு கலைக் கல்லூரியில் காமராஜர் துறைமுக நிறுவனத்தால் 5.25 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய கட்டட திறப்பு விழாவிற்கு மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டதாக கூறி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் தலைமையில் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தப்பட்டது.

சுனில் பாலிவாலைக்கு எதிராக கருப்பு கொடியுடன் போராடும் காங்கிரஸ் கட்சியினர்
சுனில் பாலிவாலைக்கு எதிராக கருப்பு கொடியுடன் போராடும் காங்கிரஸ் கட்சியினர் (Credits- ETV Bharat Tamil Nadu)

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் சுமார் 4000 மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் என பல்வேறு பாடப் பிரிவுகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் இங்கு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

பொன்னேரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்ட காங்கிரஸார் (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப வகுப்பறைகளை அமைக்கும் வகையில் காமராஜர் துறைமுக நிர்வாகத்தின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு கூட்டாண்மை சமூக பொறுப்பு திட்ட நிதி 5.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் இங்கு கட்டப்பட்டது. இதில் இன்று கட்டப்பட்ட 15 வகுப்பறைகள் கொண்ட கட்டடதிற்கு திறப்பு விழா நடைபெற்றது.

இதில் காமராஜர் துறைமுக தலைவர் சுனில் பாலிவால், மேலாண்மை இயக்குனர் ஐரீன் சிந்தியா ஆகியோர் கலந்து கொண்டு, இந்த கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். முன்னதாக கல்லூரியில் கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழாவிற்காக வருகை தந்த காமராஜர் துறைமுக தலைவர் சுனில் பாலிவால் வாகனத்தை, பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் தலைமையில் வழிமறித்தனர்.

அரசு கல்லூரியில் கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழாவிற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு, முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறி வாகனத்தை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் காமராஜர் துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தலைமையிலான அதிகாரிகள் கல்லூரிக்குள்ளே சென்று, கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏ தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கைகளில் கருப்புகொடி ஏந்தி காமராஜர் துறைமுக நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் நிறுவனமாக செயல்படும் காமராஜர் துறைமுக நிர்வாகம், பாஜக அரசின் கைப்பாவையாக, தன்னிச்சையாக செயல்படுவதாக, காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.

மேலும் மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏ, எம்பி, தலைவர் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமல், தன்னிச்சையாக இந்த திறப்பு விழா நடப்பது கண்டிக்கத்தக்கது என குற்றம் சாட்டினர். தொடர்ந்து காவல்துறையினர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும், எம்எல்ஏ, காவல்துறை சமரச பேச்சுவார்த்தை ஏற்க மறுத்த நிலையில், எம்எல்ஏ தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடிகளுடன் கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனால் காமராஜர் துறைமுக தலைவர் சுனில் பாலிவால் எம்எல்ஏவிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக வந்தார். அப்போது எம்எல்ஏ தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் துறைமுக நிர்வாகத்தை கண்டித்து, தொடர்ந்து கண்டனம் முழக்கங்களை எழுப்பியதால், சுனில் பாலிவால், மேலாண்மை இயக்குனர் ஐரீன் சிந்திய ஆகியோர் நிகழ்ச்சியை பாதியில் முடித்துக் கொண்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றனர். காங்கிரஸ் எம்எல்ஏ கருப்பு கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கல்லூரி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:தேசிய தரவரிசையில் சென்னை ஐஐடி மீண்டும் முதலிடம்; இயக்குநர் காமோடி பெருமிதம்!

ABOUT THE AUTHOR

...view details