தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 3, 2024, 4:20 PM IST

ETV Bharat / state

போலீசுக்கு பயந்து போர்டு வைத்த மாடு திருடன்.. சாத்தான்குளத்தில் நடந்தது என்ன? - Sathankulam Cow theft issue

Thief Who Left The Cows Near Sathankulam: சாத்தான்குளம் அருகே மாடுகளைத் திருடிச் சென்ற நபர், போலீசில் சிக்கி விடுமோ என்ற பயத்தில் மாடுகள் இருக்கும் இடத்தை அட்டையில் எழுதி வைத்து விட்டுச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காணமல் போன மாட்டின் புகைப்படம்
காணமல் போன மாட்டின் புகைப்படம் (credits - ETV Bharat TamilNadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியார் குடியிருப்பைச் சேர்ந்தவர் பட்டுராஜ். இவருக்குச் சொந்தமான தோட்டம் புதுக்குளம் சந்திப்பில் உள்ளது. அந்த தோட்டத்தில் 5க்கும் மேற்பட்ட பால் மாடுகளை வளர்த்து, தினமும் பால் கறந்து விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஏப்.28ஆம் தேதி தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகளில் 2 மாடுகள் மட்டும் திருடு போயிருந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பட்டுராஜ் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும், தனது மாடுகளைக் கண்டுபிடிப்பதற்காக அருகிலிருந்த கண்காணிப்பு கேமராக்களில் தீவிரமாக சோதனை செய்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல், வள்ளியூர் மற்றும் மேலப்பாளையம் மாட்டுச்சந்தைக்குச் சென்று, தனது மாடுகளின் புகைப்படத்தைக் காண்பித்து யாரும் கொண்டு வந்தால் தனக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.

இந்நிலையில், இன்று (மே.3) காலை பட்டுராஜ் வழக்கம் போல் தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, தோட்டத்தின் வாசலிலிருந்த வேலியில் ஒரு அட்டை கட்டப்பட்டிருந்துள்ளது. அந்த அட்டையில் "உங்களது மாடு சங்கரன் குடியிருப்பு கெபி அருகே உள்ள புளியமரத்து அடியில் கட்டப்பட்டுள்ளது. இடம்: இட்ட மொழி ரோடு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உடனே, பட்டுராஜ் அதில் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு வேகமாகச் சென்று, அங்கு கட்டப்பட்டிருந்த 2 மாடுகளை அவிழ்த்து தனது தோட்டத்திற்குக் கொண்டு வந்துள்ளார். இது தொடர்பாக சாத்தான்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பள்ளியில் தமிழ் பாடம் எடுத்த ஆசிரியருக்கு உதவிய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி! - Retired IAS Officer Balachandran

ABOUT THE AUTHOR

...view details