சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகபட்சமாக 3 செ.மீ மழையும், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் ௨ செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. வட தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ், வட தமிழக கடலோரப்பகுதிகள், தென் தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 19 டிகிரி முதல் 29 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 39.4 டிகிரி செல்சியஸ் மற்றும் சேலத்தில் 38.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 35.4 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 34.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (ஏப்.15) தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்.16: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்.17: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.